வேகமெடுக்கும் அந்நிய செலாவணி வழக்கு... இதிலும் சசிகலாவுக்கு சிறைத்தண்டனைதான்?
அந்நிய செலாவணி வழக்கு வேகமெடுத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, அந்நிய செலாவணி வழக்கிலும் தண்டனை பெற்றுத்தர ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்
சென்னை: ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் மோசடி நடந்தது என்று தொடரப்பட்டுள்ள அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது மோசடி வழக்கு கடந்த 1996ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னால் நேரில் ஆஜராக முடியாது என்றும் காணொலி காட்சி மூலம் தன்னிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதற்கிடையில், சசிகலா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், 'குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே தரவேண்டும்' என்று கூறியிருந்தார். இதற்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
இதையடுத்து சசிகலா தாக்கல் செய்த இந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜாகீர்உசேன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
காணொலி விசாரணை
அப்போது இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவை, கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் வருகிற 21ம் தேதி நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில சிறை நிர்வாகம் செய்ய வேண்டும்' என்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழில் கேள்விகள்
அப்போது சசிகலா தரப்பு வக்கீல் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘குற்றச்சாட்டு பதிவின்போது, ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்வியை தமிழில் மொழி பெயர்த்துக் கூற சசிகலாவுக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
நிராகரித்த நீதிமன்றம்
இந்த மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி, ‘இதுபோல் மொழி பெயர்ப்பாளர்களை சிறைக்குள் அனுமதிக்க கர்நாடக மாநில சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க மாட்டார்கள்.
மனுவை வாபஸ் பெறுங்கள்
எனவே, இந்த மனு தேவையற்றது. அதை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதை ஏற்றுக் கொண்டு, அந்த மனு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.
வேகமெடுத்துள்ள வழக்கு
21 ஆண்டுகளாக நடக்கும் வழக்கில் கடந்த ஓராண்டாக நீதிமன்ற விசாரணைகள் வேகமெடுத்துள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவை, அந்நிய செலாவணி வழக்கிலும் தண்டனை பெற செய்ய வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு முடிவு செய்துள்ளது.
சிறையில் இருக்கும்போது மீண்டும் சிறை
இப்போது சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு , அந்நிய செலாவணி வழக்கிலும் சிறைத் தண்டனை கிடைத்தால் அது இந்திய அளவில் முதன்முறையாக இருக்கும் என்று கூறுகிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.