என்ன நினைக்கிறீங்க, வெளிப்படையா சொல்லுங்க.. எம்.எல்.ஏக்களிடம் தனித்தனியாக கேட்ட சசிகலா
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா 3 மணிநேரமாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில், ஒவ்வொரு எம்.எல்.ஏக்களையும் தனித் தனியாக அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார் சசிகலா.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான சசிகலாவுக்கு எதிராக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி உயர்த்தியதைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஒரு அணியாகவும், முதல்வர் பன்னீர் செல்வம் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்.
பன்னீர் செல்வம் அணியில் அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் உள்பட பல நிர்வாகிகள் உள்ளனர். தொடர்ந்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது வரை முதல்வர் ஓபிஎஸ்க்கு மொத்தம் 5 எம்.பிக்களும், 6 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மிகப்பெரும் திருப்பமாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். ஜெயக்குமார் உள்பட மேலும் 5 அமைச்சர்கள் முதல்வர் ஓ.பி.எஸ் அணிக்குத் தாவப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சசிகலா இன்று பிற்பகல் கூவத்தூர் சென்று ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவருடன், செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு எம்.எல்.ஏக்களையும் தனித் தனியாக அழைத்துப் பேசிய சசிகலா, அவர்களின் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறுமாறு கேட்டுள்ளார். குறிப்பாக மக்களிடம் தனக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் யார் முதல்வராக வரவேண்டும் என நினைக்கின்றனர், என பல கேள்விகளை எம்.எல்.ஏக்களிடம் எழுப்பியுள்ளார்.
எம்.எல்.ஏக்களும், சசிகலாவிடம் தங்களது தனிப்பட்ட விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்ட சசிகலா போயஸ் கார்டன் இல்லத்திற்கு திரும்பினார்.