விட்டுப் போன நடிப்பை நிறைவு செய்த சசிகலா- ஜெ. பாணியில் இரு விரல் காட்டினார்!
அதிமுக அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை சசிகலா இன்று சந்தித்தார். அப்போது ஜெயலலிதா பாணியில் மாடியில் நின்று இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் வகையில் இருவிரல் காட்டினார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக பதவியேற்ற போது தம்மை இன்னொரு ஜெயலலிதாவாக காட்டிக் கொண்டார் சசிகலா. ஆனாலும் ஜெயலலிதாவைப் போல கட்சி அலுவலக மாடியில் இருந்து இரட்டை இலை சின்னத்தை காண்பிக்க மறந்துவிட்டார். இன்று அதிமுக அலுவலகம் வந்த சசிகலா ஜெயலலிதா பாணியில் மாடியில் நின்று இரட்டை விரலை காட்டி அந்த நடிப்பை நிவர்த்தி செய்தார்.
ஜெயலலிதா மறைந்த நாள் முதல் போயஸ் கார்டனில் நாடக காட்சிகள் நித்தம் நித்தம் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தன்னை ஒரு ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்டு போயஸ் கார்டனில் தம்மை சந்திக்க வருவோரிடம் நடந்து கொண்டார் சசிகலா.
போட்டோ ஷூட்
அதுவும் அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டதுதான் தாமதம். அப்படியே ஜெயலலிதாவைப் போல சிகை அலங்காரம், ஜாக்கெட், பொட்டு என உருமாறிக் கொண்டார். அத்துடன் போட்டோ ஷூட் நடத்தி அடடே! டூப்ளிகேட் ஜெயலலிதா என மெச்சும் அளவுக்கு படங்களை ரிலீஸ் செய்தார்.
6 நாளில் 50 மாவட்டங்கள்
இந்த நிலையில் 6 நாளில் 50 மாவட்ட நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் ஆலோசனை என்ற "கின்னஸ்" சாதனைக்காக அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் சசிகலா.
ஜெயலலிதாவாக உருமாறிய சசி
அதிமுக பொதுச்செயலராக பதவி ஏற்க வந்தபோது ஜெயலலிதாவாக தம்மை காட்டிக் கொண்ட சசிகலா மாடியில் நின்று தொண்டர்களை பார்த்து இரட்டை விரலை காட்ட மறந்துவிட்டார். இன்று மனப்பாடம் செய்ததைப் போல கன கச்சிதமாக முதல் வேலையாக அதை செய்துமுடித்தார்.
சொற்ப கூட்டம்
பின்னர் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா. ஆனாலும் சொற்ப எண்ணிக்கையில்தான் அதிமுக தொண்டர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.