"வீடியோ கேசட் விற்பனை" முதல் "சிஎம் போஸ்ட்" வரை... சசிகலா கடந்து வந்த பாதை!
திருத்துறைப்பூண்டியில் பிறந்து மன்னார்குடியில் வளர்ந்து, விளார் கிராமத்தில் திருமணமாகி, சென்னை போயஸ்கார்டனில் குடியேறி இப்போது தமிழக முதல்வராக அதிமுகவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் சசிகலா.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் கடந்த 30 வருடமாக தங்கியிருந்த சசிகலா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்ததோடு தற்போது அதிமுக சட்டசபைத் தலைவராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக சட்டசபைத் தலைவராக சசிகலாவின் பெயரை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். இதன்மூலம் அவர் முதல்வராவது உறுதியாகியுள்ளது.
1957இல் இவர் மன்னார்குடியில் பிறந்தார். திருத்துறைப்பூண்டியை சேர்ந்த இவரின் தாத்தா சந்திரசேகர் அவ்வூரில் மருந்துக்கடை நடத்திவந்தார். அவரது மறைவுக்கு பின் அவரின் மகன் விவேகானந்தன் அக்கடையை கவனித்துக்கொண்டார். இங்கிலீஸ் மருந்து கடைக்காரர் என்று அறியப்படுகிறது இந்த வீடு
மருந்துக்கடையுடன் விவேகானந்தன் பார்மசிஸ்ட் ஆக பணிபுரிந்தார். விவேகானந்தன், கிருஷ்ணவேணி தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள். அதில் சசிகலா ஐந்தாவது பெண் குழந்தை.
மன்னார்குடி குடும்பம்
பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்த சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம் 1950 இறுதியில் மன்னார்குடிக்கு மாற்றலாகி வந்ததால் விவேகானந்தனின் குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தது. 10வது வரை மட்டுமே படித்துள்ளார் சசிகலா.
நடராஜனுடன் திருமணம்
1973ஆம் ஆண்டு விளார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை திமுக தலைவர் மு. கருணாநிதி நடத்திவைத்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதே கருணாநிதியின் அறிமுகம் நடராஜனுக்கு கிடைத்ததுதான்.
ஜெயலலிதாவுடன் அறிமுகம்
கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக நடராஜன் பணியாற்றிய போது அங்கு பொதுக்கூட்டத்திற்கு வந்த ஜெயலலிதாவிற்கு தனது மனைவி சசிகலாவை உதவியாளராக அனுப்பினார் . சசிகலாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் இடையேயான அறிமுகம் கடலூரில்தான் தொடங்கியது.
வீடியோ கேசட் விற்பனை
அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா இருந்த போது அவரது பேச்சுக்களை பதிவு செய்ய நல்ல ஆட்களை தேடி வந்தனர். சசிகலா வீடியோ கவரேஜ் நிறுவனத்தையும், கேசட் கடையையும் நடத்தி வந்தார். ஜெயலலிதாவுக்கு திரைப்பட வீடியோ கேசட்களை சசிகலா கொடுத்து வந்ததன் மூலம் இருவருக்கு நட்பு உருவானது. கூடவே ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு செல்லும் அளவிற்கு செல்வாக்கு அதிகரித்தது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, கட்சியில் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி அதிகரித்திருந்தது. அந்த நேரத்திலும், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அரசியல் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்த போதும் ஜெயலலிதாவுடன் இருந்து நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டார் சசிகலா.
கூடவே இருந்த சசிகலா
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில் ஜெயலலிதா அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எல்லாம் ஜெயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா தான். ஜெயலலிதா சட்டசபைக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார். சட்டசபையிலேயே தாக்கப்பட்டார்.
வேதா நிலையத்திற்குள் சசிகலா
ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் ஜெயலலிதா. இந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்த சசிகலா, அதன்பின்னர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் வந்து தங்க ஆரம்பித்தார்.
முதல்வரான ஜெயலலிதா
1991ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. அப்போது சசிகலாவுடன் அவரது உறவினர்கள் சிலரும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாகினர்.
உடன் பிறவா சகோதரி
எனது உடன்பிறவா சகோதாரி சசிகலா என அறிவித்தார் ஜெயலலிதா. அதோடு 'சசிகலா எப்போதும் என்னோடுதான் இருப்பார். அவரைப்பற்றிய எந்த கேள்வியும் அவசியமற்றது' என வெளிப்படையாகவே அறிவித்தார் ஜெயலலிதா.
அம்மாவும் சின்னம்மாவும்
அம்மா என ஜெயலலிதாவுக்கு கிடைத்த அனைத்து மரியாதைகளும், 'சின்னம்மா' சசிகலாவுக்கும் கிடைக்கத் துவங்கியது. 2011ல் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மன்னார்குடி குடும்பம் தனக்கு எதிராக சதி செய்வது தெரியவரவே போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டனர். சசிகலாவும் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டார்.
எல்லாமே அக்காதான்
இந்த பிரிவும் சில நாட்களே நீடித்தது. மீண்டும் தனக்கு பதவி ஆசை கிடையாது எல்லாமே அக்காதான் என்று எழுதிக் கொடுத்து விட்டு போயஸ் கார்டன் வந்தார் சசிகலா. சசிகலா இல்லாமல் ஜெயலலிதாவால் தனித்து இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு சசிகலா ஜெயலலிதாவுடன் ஐக்கியமானார்.
உறவுகளை துறந்த சசிகலா
2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் செல்ல, அவருடன் சசிகலாவும் சென்றார். நெருக்கடியான காலகட்டங்களில், சிறையில், கணவரை கைது செய்து சிறையில் அடைத்தபோது, குடும்ப உறவுகளை எல்லாம் விலக்கி வைத்தபோது ஜெயலலிதாவுடனே இருந்தார் சசிகலா.
கடைசி காலத்தில்
ஜெயலலிதாவின் கடைசிக் காலத்தில் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது அவரை கவனித்துக்கொண்டார் சசிகலா. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் இறுதிச்சடங்குகள் செய்து தான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லாமல் சொன்னார் சசிகலா. அதிமுகவில் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டு பொதுச்செயலாளரானார்.
முதல்வரான சசிகலா
சசிகலா பொதுச்செயலாளராகி 38 நாட்களுக்குள் தற்போது அதிமுக எம்.எல்.ஏக்களினால் தற்போது ஏகமனதாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்துள்ளார். விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார் சசிகலா. திருத்துறைப்பூண்டியில் பிறந்து, மன்னார்குடியில் வளர்ந்து தற்போது புனித ஜார்ஜ்கோட்டையில் முதல்வர் பதவியில் அமரப்போகிறார் சசிகலா.