ஒன் இந்தியா தமிழ் அம்பலப்படுத்திய இளவரசி மகன் விவேக் சட்டப் படிப்பு மோசடி-லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு
ஒன் இந்தியா தமிழ் அம்பலப்படுத்திய இளவரசி மகன் விவேக் சட்டப் படிப்பு மோசடி-லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு
Recommended Video
சென்னை: ஓராண்டுக்கு முன்னர் நமது ஒன் இந்தியா தமிழ் அம்பலப்படுத்திய இளவரசி மகன் விவேக் சட்டப்படிப்பு மோசடி விவகாரத்தில் தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
"சட்ட படிப்பில் இளவரசி மகன் விவேக் ஃபிராடு? போட்டுக் கொடுத்ததா திவாகரன் தரப்பு?" என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதியன்று நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் விதிகளை மீறி வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டில் விவேக் ஜெயராமனுக்கு 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் வீடுகளில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது பதவி காலங்களில் பேராசிரியர் நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கியது; வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தியது என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த மோசடியில் விவேக் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 2015-ல் 3 ஆண்டு எல்.எல்.பி படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் விவேக் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுக்கான எந்த ஒரு சான்றிதழும் விவேக் தாக்கல் செய்யவில்லை. அவருக்கு முறைகேடாக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இம்மோசடியில் ஆதாயம் அடைந்தவர் விவேக் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விவேக் மீது விரைவில் நடவடிக்கை பாய இருக்கிறது என கூறப்படுகிறது.