ஆடி அமாவாசை பூஜை: ஜெ.வுக்காக அகஸ்தியர் கோவிலில் வழிபட்ட சசிகலா
சென்னை: அதிமுக தலைமை தன்னை தாக்கியதாக ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா கூறிய குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆடி அமாவாசை தினமான நேற்று தியாகராய நகரில் உள்ள அகஸ்தியர் கோவிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.நகர் ராஜா தெருவில் உள்ள அருள்மிகு அகஸ்தியர் திருக்கோயில். பழமையான கோயில், தமிழ் நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆடி அமாவாசை நாளில் சித்தர்களை வணங்குவது நன்மை தரும் என்பது நம்பிக்கை அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வந்து சசிகலா வழிபட்டு சென்றதாக கூறப்படுகிறது.
திங்கட்கிழமையன்று ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, தான் ராஜினாமா செய்ய மிரட்டப்படுவதாகவும், கட்சித்தலைமை தன்னை தாக்கியதாகவும், அதிமுக தலைமைக்கு எதிராக குற்றம் சாட்டினார். அன்றைய தினத்தில் ராஜ்யசபாவிற்குள் இருந்த உறுப்பினர்களை மட்டுமல்ல மொத்த இந்தியாவையும்,அத்தனை அரசியல் கட்சிகளையும் அதிர்ச்சியடைய வைத்தது.
போயஸ்கார்டனில் அடிப்பதும் அடிவாங்குவதும் சாதாரணம் என்பது போல பேசினர். அதிமுக தலைமையின் அணுகுமுறை பற்றிய பல்வேறு கேள்விகளையும் இது எழுப்பிய நிலையில் அதிமுக தலைமை மீதான இமேஜ் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைமை கருதுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு ஜோதிடர்களின் ஆலோசனைப்படி சசிகலா நடராஜன் திநகர் அகஸ்தியர் கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
சசிகலா நடராஜன் பவுர்ணமி தினங்களில் திருவான்மியூர் பாம்பன் சுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். இந்த நிலையில் அகஸ்தியர் கோவிலில் வழிபட்டுள்ளார் சசிகலா.