நிர்வாண மசாஜ் புகார்.. சசிகலா புஷ்பா, கணவர், மகன் முன்ஜாமீன் மனு நாளைக்கு ஒத்திவைப்பு
மதுரை: பாலியல் புகாரில் சிக்கிய ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோரது முன்ஜாமீன் மனு மீது நாளை ஹைகோர்ட் மதுரை கிளை விசாரணை நடத்துகிறது.
சசிகலா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் இருவர், சசிகலா, அவரது கணவர் மற்றும் மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். நிர்வாண மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தினர் என்று அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.
மேலும் ஒப்பந்ததாரர் ஒருவர் பணமோசடிப் புகாரையும் அளித்தார். முன்ஜாமீன் இவ்விரு வழக்குகளிலும் கைது செய்யப்படலாம் என்பதால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார் சசிகலா.
மனுவை விசாரித்த நீதிபதி முத்தா குப்தா, 'வருகிற 22ம் தேதி (இன்று) வரையில் சசிகலாவை கைது செய்யக் கூடாது' எனவும் ' முன்ஜாமீன் பெறுவது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகவும்' உத்தரவிட்டார்.
இதையடுத்து, சம்மந்தப்பட்ட நீதிமன்றமான, மதுரை உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார் சசிகலா. அந்த மனுவில், ' என் வீட்டில் வேலை பார்த்து வந்த ஜான்சிராணி மற்றும் பானுமதி ஆகியோரை பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்தியதாகவும், மொட்டையடித்து வெளியேவிடாமல் அவமானப்படுத்தியதாகவும் தூத்துக்குடி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பழிவாங்கும் போக்கு சிலர் தூண்டுதலின் பேரில் இந்தப் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இது தவிர, நெல்லையிலும் என் மீது மோசடிப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. என்னை பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, பாலியல் வழக்கில் இருந்து முன்ஜாமீன் அளிக்க சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகனும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, இன்று மதுரை ஹைகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. மனுவை நாளை விசாரிப்பதாக நீதிமன்றம் தள்ளி வைத்தது. சசிகலா புஷ்பா மற்றும் குடும்பத்தாருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா என்பது நாளை தெரியவரும்.