போயஸ் கார்டன் வீட்டை தனிநபர் அபகரிப்பதா ? சசிகலா புஷ்பா கொந்தளிப்பு
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார். அந்த வீடு தனிபர்கள் கைக்கு போகக் கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க வேண்டும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறியதாவது:
ஒரு முதல்வர் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. ஒரு தியாகியாக வாழ்ந்தவர் ஜெயலலிதா.
அவர் வாழ்ந்த வீட்டை அரசாங்கத்தின் சொத்தாக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் அந்த வீட்டை சென்று பார்வையிட முடியும்.
ஜெயலலிதா வீட்டை அரசு சொத்தாக மாற்றும்போது அந்த வீட்டை பார்வையிடும் மக்கள் நாம் எப்படி வாழ வேண்டும் என்கிற முன்னுதாரணத்தைப் பெற முடியும். அந்த வீட்டை யார் யாருக்கோ எழுதி வைத்துவிட்டதாக வரும் செய்திகள் ஏற்க முடியாதது.
ஆகையால் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை அரசுடையமையாக்க வேண்டும்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.