"பளார்" கொடுத்தது முதல் ஆசிட் வீச்சு கொலை மிரட்டல் வரை- சசிகலா புஷ்பா சர்ச்சைகள்
சசிகலா புஷ்பாவும் சர்ச்சைகளும் கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாகவே நடந்து வருகிறது. டெல்லி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய சர்ச்சை 2017 ஆண்டு இறுதியில் ஆசிட் வீச்சு கொலை மிரட்டல் வரை நீடிக்கிறது.
Recommended Video
சென்னை: சசிகலா புஷ்பா என்றாலே சர்ச்சைகள் என்றாகி விட்டது. டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி திருச்சி சிவாவிற்கும் அ.தி.மு.க., எம்.பி. சசிகலா புஷ்பா இடையே கைகலப்பு ஏற்பட்டது. அது முதலே சர்ச்சைகள் நீடித்து வருகிறது. ராஜ்யசபாவில் பொங்கியது, இப்போது தினகரனுக்கு வாழ்த்து சொல்லி ஆசிட் வீச்சு கொலை மிரட்டல் வரை தொடர்கதையாகி வருகிறது.
அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா, திமுக தரப்புடன் நெருக்கமாக இருப்பதாக புகார் எழுந்தது. ஜெயலலிதா தன்னை அறைந்தார், தன்னை அடித்தார் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று ராஜ்யசபாவில் பகிரங்கமாக குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணம் சசிகலா குடும்பம் தான் என அவர் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். அதே சசிகலா புஷ்பாதான் மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரனுக்கு வாழ்த்து சொல்லி கொலை மிரட்டலுககு ஆளாகியுள்ளார்.
அறைந்து பேர் வாங்கிய புஷ்பா
டெல்லி விமான நிலையத்தில் திமுகவின் திருச்சி சிவா எம்.பியை சசிகலா புஷ்பா திடீரென தாக்கினார். அவர் சட்டையை பிடித்து இழுத்து அறைந்தார். இதனால் ஏற்பட்ட சலசலப்பு ஊடகங்களில் பரபரப்பு செய்தியானது. சசிகலா புஷ்பாவின் புகைப்படங்கள் ஊடகங்களில் பேசுபொருளானது.
அறைவாங்கிய புஷ்பா
இந்த சம்பவம் நிகழ்ந்து சில நாட்களில் போயஸ்கார்டனுக்கு அழைக்கப்பட்ட சசிகலா புஷ்பா அறை வாங்கியதாக தகவல் வெளியானது. அதே குற்றச்சாட்டை ராஜ்யசபாவிலும் முன் வைத்தார். தன்னை கொலை செய்யப்போகிறார்கள், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறி அழுது ஆர்பாட்டம் செய்தார். கட்சி தலைமைக்கு எதிராக முதன் முறையாக ராஜ்யசபாவிலேயே குற்றச்சாட்டு வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கைதில் இருந்து தப்பிய சசிகலா
சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்த போது தனக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாகவும், சசிகலா புஷ்பாவும் மதுபோதையில் தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும் தூத்துக்குடி எஸ்.பியிடம் பானுமதி தனது சகோதரி ஜான்சிராணியுடன் சென்று புகார் அளித்தனர். ஆனால் வழக்குகளை சமாளித்து சிங்கப்பூரில் எல்லாம் சென்று பதுங்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார் சசிகலா புஷ்பா.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர் அதிமுகவினருடன் தொடர்பில் இல்லாமல் தனியாக செயல்பட்டு வந்தார். தமிழகத்திற்கு அவர் வராமல் டெல்லியிலேயே தங்கி இருந்தார். அதிமுக கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதால் தன்னை சுயேச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி தாவல் தடை சட்டம் தனக்கு பொருந்தாது என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு முடித்து வைப்பு
அதே நேரத்தில் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக கட்சித்தலைமையிடம் இருந்தும் ராஜ்யசபா செயலாளரிடம் இருந்து கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை என்பதால் என்று சசிகலா புஷ்பா அதிமுக எம்பியாகவே நீடிக்கலாம் என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சதிவலை
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, முதல்வரைச் சுற்றி சதிவலை நடக்கிறது. அவரது கையெழுத்தைப் போலியாகப் போட்டு பதவிக்கு வர முயற்சி செய்கிறார் சசிகலா என அதிரடி பேட்டி கொடுத்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணம் மன்னார்குடி குடும்பத்தினர்தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சசிகலா புஷ்பாவின் கணவர்
ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, சசிகலாவை பொதுச் செயலாளர் பதவிக்குக் கொண்டு வருவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் சசிகலா புஷ்பா. அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு வாங்குவதற்காக தன்னுடைய கணவர் லிங்கேஸ்வர திலகனை அனுப்பி வைத்தார் சசிகலாபுஷ்பா. ஆனால் அவர் ரத்தம் சொட்டச் சொட்ட அடிவாங்கினார்.
மன்னார்குடி குடும்பம்
மன்னார்குடி குடும்பத்தினரோ சசிகலா புஷ்பா பற்றிய அவதூறுகளை நமது எம்.ஜி.ஆரில் வெளியிட வைத்தனர். உன்னுடைய பூக்கடை சமாச்சாரங்களைச் சொல்லவா?' எனக் கட்டுரையே எழுதினர். தொடர்ந்து, சசிகலா புஷ்பாவைப் பற்றி கொச்சையான வார்த்தைகளில் சுவரொட்டி ஒட்டினர்.
மன்னார்குடி குடும்பம் சசிகலா புஷ்பா
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து டிடிவி.தினகரனுக்கு அவரது வீட்டிற்கு சென்று சசிகலா புஷ்பா வாழ்த்து தெரிவித்தார். இதனை மன்னார்குடி குடும்பத்தினர் ரசிக்கவில்லை. ஆனாலும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தினகரனிடம் கூறி விட்டு வந்துள்ளார் சசிகலா புஷ்பா. இப்போது தேனாம்பேட்டையில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார் சசிகலா புஷ்பா. இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆசிட் ஊற்றுவோம்
தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. டிடிவி.தினகரனுக்கு வாழ்த்து கூறியதை கண்டித்தும் தமிழகத்திற்குள் வர கூடாது என்று கூறியும் சென்னைக்கு ஏன் வந்தீங்க? சசிகலா புஷ்பா வெளியில் நடமாடினால் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவோம். இங்கு இருந்து ஓடிவிடுங்கள் என்று கூறி எச்சரித்து இணைப்பை துண்டித்து விட்டதாக கூறியுள்ளார் பணிப்பெண். இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சசிகலா புஷ்பா.
சசிகலா என்றாலே சர்ச்சையா?
அதிமுகவில் சசிகலா என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. ஜெயலலிதா உடன் இருந்த சசிகலாவும், அதிமுகவில் இருந்த சசிகலா புஷ்பாவும் கடும் சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு முதலே சர்ச்சைகளில் சிக்கி ஊடகங்களில் செய்தியாகி வரும் சசிகலா புஷ்பா தனது பதவி காலத்தை முடிக்கும் முன்பாக இன்னும் என்னென்ன சர்ச்சைகளில் சிக்கப் போகிறாரோ?