திருவையாறு தொகுதியில் சசிகலா உறவினர்... 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட களப்பணி..!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் சசிகலாவின் உறவினரான வேலு கார்த்திகேயன் வலிமையான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பதால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் வைத்திலிங்கம் எம்.பி.
திருவையாறு தொகுதியை பொறுத்தவரை பத்தோடு பதினொன்றாக கருத முடியாத தொகுதியாகும். காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே அரசியலில் இருந்து விலக வைத்த தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு போற்றும் நல்ல நடிகர் என பெயரெடுத்த சிவாஜி 1989 சட்டமன்றத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் தான் டெபாசிட் பெற்றிருந்தார்.
திருவையாறு தந்த தோல்வி தமிழக முன்னேற்ற முன்னணியை கலைத்து விட்டு அரசியலைவிட்டே சிவாஜியை ஒதுங்க வைத்தது. இப்படிப்பட்ட பின்னணியை கொண்ட திருவையாறில் திமுகவின் துரை சந்திரசேகரன் கடந்த கால் நூற்றாண்டு காலமாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சிவாஜியை தோற்கடித்த நபரும் இவர் தான்.
அன்பை தொற்ற வைப்போம்... மத்தாப்பு வாழ்க்கையை கித்தாய்ப்பாக வாழ்வோம் - கமல் தீபாவளி வாழ்த்து
இந்நிலையில் வரும் தேர்தலில் திருவையாறு தொகுதியை அதிமுக வசம் கொண்டு வர வைத்திலிங்கம் எம்.பி. இப்போதே வியூகங்கள் வகுத்து செயல்படத் தொடங்கிவிட்டார். ஆனால் அவரது வியூகங்களுக்கு கடுமையான டஃப் கொடுத்து வருகிறார் சசிகலாவின் உறவினரும், அமமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளருமான வேலு கார்த்திகேயன்.
இவரது தந்தை வேலு மாவலியார் ஒரு கதர்சட்டை பிரமுகர். காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடியாக திகழ்ந்த வேலு மாவலியாருக்கு திருவையாறு பகுதியில் மிகுந்த செல்வாக்கு இருந்து வருகிறது. அதனை அப்படியே தனக்கான அரசியலுக்கு அறுவடை செய்து வருகிறார் வேலு கார்த்திகேயன். தந்தையின் புகழையும் செல்வாக்கையும் சாதுர்யமாக பயன்படுத்தி கடந்த 2 ஆண்டுகளாக தொகுதியில் களப்பணிகளை கவனித்து வருகிறார்.
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவராக இருக்கும் வேலு கார்த்திகேயன் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவையாறில் களமிறங்குவது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார். டிடிவி தினகரனும் இவருக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதால் மாதம் ஒரு ஆர்ப்பாட்டம்-போராட்டம்- என விவசாயிகளை திரட்டி வருகிறார்.