ஓபிஎஸ்ஸை வேவு பார்க்க ஆட்களை ஏவிய மன்னார்குடி கோஷ்டி!
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வேவு பார்க்க ஒவ்வொரு இடத்திலும் அதிகாரிகளையே ஏவி விட்டிருக்கிறது மன்னார்குடி கோஷ்டி என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வேவு பார்க்க மட்டுமே தனியாக ஆட்களை வைத்திருக்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றிவிடலாம் என கனவு கண்டது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் மத்திய அரசோ முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மூலமாக இந்த நகர்வுகள் அனைத்துக்கும் செக் வைத்துக் கொண்டிருக்கிறது.
இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது மன்னார்குடி வகையறா. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையில் தலைமைச் செயலகத்திலும் பெரியகுளத்திலும் தனியாக ஆட்களை போட்டு வைத்திருக்கிறார்களாம்.
அண்மையில் மத்திய அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்திருக்கிறார். இது தமிழக அரசின் உளவுத்துறைக்கே சில மணிநேரம் கழித்துதான் தெரியவந்தாம்.
உடனே இந்த தகவல் மன்னார்குடி கோஷ்டிக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களும் என்னவோ ஏதோவென அரண்டு போயிருக்கிறார்கள். பின்னர்தான் மத்திய அரசு அதிகாரி வந்தது வேறொரு விஷயமாக என அறிந்து அமைதியாகி இருக்கிறார்கள்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை கண்காணிக்க தனி ஆட்களைப் போட்டும் மத்திய அரசு நம் கண்ணில் மண்ணை தூவிவிட்டு நேரடியாக சந்தித்து வருவது மன்னார்குடி கோஷ்டியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.