அதிமுகவில் கோலோச்சும் கொங்கு மண்டல அமைச்சர்கள்... கடுங்கோபத்தில் 'டெல்டா' கோஷ்டி
அதிமுகவில் நிழல் முதல்வர்களாக கொங்கு மண்டல அமைச்சர்கள் வலம் வருவதில் சசிகலாவின் டெல்டா கோஷ்டி கடும் கோபத்தில் இருக்கிறதாம்.
சென்னை: அதிமுகவில் கால்நூற்றாண்டு காலமாக தங்களது கை ஓங்கியிருந்த நிலையில் தற்போது கொங்குமண்டல அமைச்சர்கள் செல்வாக்கு செலுத்துவதால் மன்னார்குடி கோஷ்டி கடுங்கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமை ஏற்றது முதல் அவர் மறையும் வரை சசிகலாவும் அவரது உறவினர்களும்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த மன்னார்குடி கோஷ்டி நினைத்தால் அதிமுகவில் எந்த பதவிக்கும் எவரும் வரமுடியும் என்கிற நிலை இருந்தது.
சசிகலா கட்டுப்பாட்டில்...
ஜெயலலிதாவுக்கு இணையாகவும் சில நேரங்களில் ஜெயலலிதாவை மீறியதாகவும் இந்த சசிகலா கோஷ்டி விஸ்வரூபமெடுத்திருந்தது. அதிமுக ஆட்சியில் இருந்த காலங்களில் அமைச்சர்கள் அனைவருமே சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தனர்.
தூக்கியடிக்கப்பட்ட சீனியர்கள்
சசிகலா கோஷ்டியுடன் இணக்கமாக இல்லாதவர்கள் தூக்கியடிக்கப்பட்டு அரசியலைவிட்டே ஓரங்கட்டப்பட்டவர்கள் பலரும் உண்டு. அப்படியானவர்கள்தான் இப்போது ஓபிஎஸ் கோஷ்டியில் தஞ்சமடைந்துள்ளனர்.
சிறையில் சசி, தினகரன்
ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிமுகவை கபளீகரம் செய்ய சசிகலாவும் அவரது உறவினர்களும் முயற்சித்தனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போனார். அவரால் துணைப் பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரனும், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
கொங்கு அமைச்சர்கள்
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கொங்கு மண்டல அமைச்சர்கள்தான் இப்போது அதிமுகவிலும் ஆட்சியிலும் கோலோச்சி வருகின்றனர். கொங்கு மண்டல அமைச்சர்கள் பலருமே தங்களை நிழல் முதல்வர்கள் போல நினைத்துக் கொண்டுதான் செயல்படுகின்றனர்.
திவாகரனுக்கு தோல்வி
சசிகலா, தினகரன் இல்லாத தருணத்தில் அதிமுக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற திவாகரன் தரப்பு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலன் தரவில்லை. அத்துடன் எடப்பாடிக்கு எதிரான கோஷ்டிகளை கொங்கு மண்டல அமைச்சர்கள்தான் எதிர்கொண்டும் வருகின்றனர்.
கோபத்தில் மன்னார்குடி கோஷ்டி
அதிமுகவில் கொங்கு கோஷ்டி கை ஓங்கியிருப்பதை கண்டு மன்னார்குடி வட்டாரங்கள் ரொம்பவே கொந்தளிக்கின்றனவாம். இதனால் சசிகலா தடலாடியாக ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெருக்கடியும் கொடுக்கிறதாம் மன்னார்குடி சொந்தங்கள்.