பறிக்கப்படுவது.. ஜெ, சசிகலாவுக்கு சொந்தமான 6 நிறுவனங்களின் சொத்துகளாம்!
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் 6 நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளும் பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் 6 நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளையே பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை வசூலிக்க அவர்கள் 4 பேரது சொத்துகளை முடக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 68 சொத்துகளை பறிமுதல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் 6 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது.
சொத்து பறிமுதல்
மேலும் இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டாலும் அவை அபராதத் தொகைக்கு ஈடாகாத நிலை உள்ளது. இதனால் வங்கிகளில் இருக்கும் ரொக்கத்தை பறிமுதல் செய்வது, தங்க வைர நகைகளை விற்பது ஆகியவற்றை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்ககம் செய்ய முடியாது.
எவை எவை
இந்நிலையில் லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப் மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ராமராஜ் அக்ரி ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ் (பி) லிமிடெட், ரிவர்வே அக்ரோ பிராடக்ட்ஸ் (பி) லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்களுக்கான வருவாய் முழுவதும் குறிப்பிட்ட அந்தக் காலத்தில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரிலான நிறுவனங்களுக்கு வந்துள்ளன.
பண முதலீடுகள் இல்லை
இந்த நிறுவனங்கள் வியாபாரத்தில் தங்களுடைய பணம் எதையும் முதலீடு செய்யவில்லை என்பது விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் கணக்கில் வராத பெருந் தொகையை ஜெயலலிதா, சசிகலா வங்கிக் கணக்குகளில் மாற்றுவதற்கு பயன்பட்டுள்ளன.
நீதிமன்றத்திற்குத் தகவல்
இதனால் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகளை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவை பறிமுதல் செய்ததும் அதை விசாரணை நீதிமன்றத்துக்கு தமிழக அரசு தெரிவிக்கும்.