சசிகலா கேட்ட தகவலை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தர தயார்- வக்கீல்
சசிகலா கேட்ட தகவல்களை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தர தயாராக உள்ளதாக வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து தன் மீது சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தவர் யார் என்று சசிகலா கேட்ட கேள்விக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதில் தர தயாராக உள்ளதாக வழக்கறிஞர் செந்தூண்பாண்டியன் தெரிவித்தார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்கள், எதிர்க்கட்சியினர் புகார் கூறினர். சமூகவலைதளங்களிலும் சில பகீர் தகவல்கள் பரப்பப்பட்டன.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் தனது விசாரணையை நவம்பர் மாதம் தொடங்கினார்.
பிரமாண பத்திரங்கள் தாக்கல்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விவரங்களை பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யலாம் என்று கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் தீபா, மாதவன், திமுக மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் நேரடியாக சென்று பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
சசிகலா 15 நாட்களுக்குள் ஆஜர்
ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து விசாரணை நடத்த சசிகலா 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி கமிஷன் மெயிலில் சம்மனை அனுப்பியது. ஆனால் சசிகலாவோ தனக்கு நேரில் சம்மன் வந்தால் பார்த்துக் கொள்வேன் என்று கூறியதாக சிறை துறையினர் தெரிவித்தனர்.
புகார் கூறியது யார்
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என்று கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என்று நீதிபதி ஆறுமுகசாமியிடம் கடந்த 5-ஆம் தேதி சசிகலா கேள்வி எழுப்பினார். இது தொடர்பான மனுவை அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒப்படைத்தார். மேலும் தன் மீது புகார் கொடுத்தவர்களின் விவரங்களை ஆணையம் கொடுத்ததில் இருந்து 15 நாட்களுக்குள் பதில் தர தயாராக உள்ளதாகவும் சசிகலா தெரிவித்திருந்தார்.
வக்கீலிடம் தகவல்களை தர தயார்
இதையடுத்து ஆறுமுகசாமியிடம் சசிகலா கேட்ட தகவல்களை தர விசாரணை ஆணையம் தயாராக இருப்பதாக ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், விசாரணை ஆணையத்திடம் சசிகலா கேட்ட புகார்தாரர் குறித்த விவரங்களை தர ஆறுமுகசாமி ஆணையம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நான் நேரில் செல்லும் பட்சத்தில் என்னிடம் அந்த விவரங்களை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அளிக்கும் பட்சத்தில் 15 நாட்களுக்குள் சசிகலா ஆஜராவார் என்றார் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்.