சசிகலா சகோதரர் திவாகரனுக்கும் வருமான வரித்துறையினர் நேரில் ஆஜராக சம்மன்!
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சசிகலா சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பியது வருமான வரித்துறை.
சென்னை : வருமான வரித்துறையினரின் சோதனையை அடுத்து நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சசிகலா மற்றும் தினகரன் தொடர்புடைய உறவினர்கள், நண்பர்கள் என பலரது வீடு, அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை நடைபெற்றது. மொத்தம் 180க்கும் அதிகமான இடங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் ஏராளமான முறைகேடான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஜெயா டி.வி அலுவலகம், விவேக் ஜெயராமன் வீடு, மிடாஸ் மதுபான ஆலை, கர்சன் டீ எஸ்டேட் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இன்னும் சோதனை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்டவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இதனடிப்படையில் கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அதுபோல, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன், சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார் ஆகியோரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகினர்.
இதனைத் தொடர்ந்து சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள அவரது வீடு, செங்கமலத்தாயார் கல்லூரி ஆகியவற்றில் ஐ.டி ரெய்டு நடந்தது. அதுபோல, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அவரது வீட்டிலும் ரெய்டு நடந்தது.
சென்னையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக திவாகரனை நேரில் ஆஜராக சொல்லி சென்னை வருமான வரித்துறை அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் அவர் நேரில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல சுந்தரக்கோட்டையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்தும் அவருக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.