சசிகலா கனவில் குண்டைப் போட்ட ஓ.பி.எஸ்.. இனி ஜென்மத்துக்கும் முதல்வராக முடியாது!
சசிகலாவின் முதல்வர் கனவில் ஓ.பன்னீர் செல்வம் குண்டைப் போட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.
சென்னை: அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மொத்தமாக சசிகலாவின் முதல்வர் கனவில் அணு குண்டு போட்டு விட்டார். இனி சசிகலாவால் நிச்சயம் முதல்வர் பதவிக்கு வர முடியாத நிலையையும் அவர் ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
தன்னிடம் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலக வைத்து விட்டதாக பகிரங்கமாகவே கூறி விட்டார் ஓ.பன்னீர் செல்வம். இது போதும், அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் நிராகரிக்க. எனவே சட்டப்படி ஓ.பன்னீர் செல்வமே முதல்வராக நீடிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
அதிமுக எம்.எல்.ஏக்களை கையில் வைத்துக் கொண்டு சசிகலா ஆட்டம் காட்ட முயலலாம். ஆனால் அதற்கும் அதிமுகவினர் ரூபத்தில் பெரும் மிரட்டில் உள்ளது. நிச்சயம் ஓ.பன்னீர் செல்வத்திற்குப் பின்னால் கட்சியினர் திரள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. விடிந்தால் மிகப் பெரிய பிரளயத்தை அதிமுக சந்திக்கும், சசிகலா சந்திப்பார் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே கட்சியினரை மதிக்காமல், அவர்களை தூக்கி எறிந்து விட்டு நிச்சயம் சசிகலா குரூப் எந்த துணிகரமான முடிவையும் எடுக்காது என்றே தெரிகிறது. ஓ.பன்னீர் செல்வம் இந்த அளவுக்கு இறங்கிப் பேசி விட்டதால் நிச்சயம் சசிகலாவால் இனி முதல்வர் பதவியை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்பதே நிதர்சனமாகும்.
இதைத்தான் பாஜகவும் விரும்பியது, எதிர்பார்த்தது. பாஜகவின் ஸ்கிரிப்டைத்தான் ஓ.பன்னீர் செல்வம் அமல்படுத்தி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் கூட அதிமுகவினர் ஓ.பன்னீர் செல்வம் பின்னால்தான் அணிவகுப்பார்கள் என்பதால் நிச்சயம் சசிகலாவுக்கு இது பெரும்
மரண அடி என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு வேளை எம்.எல்.ஏக்களை வைத்து சசிகலா தனது கனவை சாதிக்க முயன்றால், அதையும் கூட பாஜக ஆதரவுடன் ஓ.பன்னீர் செல்வம் தகர்த்து விடுவார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே சசிகலாவின் முதல்வர் கனவு கிட்டத்தட்ட கரைந்து காணாமல் போய் தரைமட்டமாகி விட்டதாகவே கருதப்படுகிறது.