பரோல் காலம் இன்றுடன் முடிவடைகிறது.. சசிகலா மீண்டும் சிறை திரும்புகிறார்?
சசிகலாவின் பரோல் காலம் இன்றுடன் முடிவடைய உள்ளதால் அவர் மீண்டும் பெங்களூரு சிறை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: சசிகலாவின் பரோல் காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் அவர் மீண்டும் பெங்களூரு சிறை செல்வாரா அல்லது அவரது பரோல் காலத்தை நீட்டிக்கப்படுமா என்பது கேள்வியாக உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
இந்நிலையில் அவரது கணவர் நடராஜனுக்கு உடல்நிலை குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து அவரது நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை கொடுத்தனர்.
இதையடுத்து அவருக்கு கடந்த 4-ஆம் தேதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கணவர் நடராஜனை கவனித்துக் கொள்வதற்காக சசிகலா கடந்த 6-ஆம் தேதி பரோலில் வெளியே வந்தார். அவருக்கு 5 நாள்களுக்கு பரோல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவின் பரோல் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று அவர் சிறை திரும்புவாரா அல்லது பரோல் காலத்தை நீட்டிக்க கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.