சசிகலா அக்கா மகன் பாஸ் (எ) பாஸ்கரன் மீது புகார் : ரூ.7 கோடி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சசிகலாவின் அக்கா மகனான பாஸ்கரன் மீது ரூ. 7 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் மோசடிப் புகார்களில் சிக்குவது என்பது புதிதான விஷயமல்ல. 2013ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரின் தங்கை சுமதிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையிலும் இருந்துள்ளார்.
இதே போன்று 2012ம் ஆண்டு பாஸ்கரன் மீது நிலமோசடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருநீர் மலை மெயின் ரோட்டில் 10 சென்ட் நிலம் மோசடி செய்ததாக ரவி என்பவர் சங்கர் நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மோசடி மன்னன்
சென்னையில் வசித்து வரும் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி பாஸ்கரன் தலைவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா டிவியில் பொறுப்பில் இருந்த இவர், பிறகு அதிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார். ஜெயா டிவியில் வேலை பார்த்த போதே மோசடி புகாரில் சிக்கி பாளையங்கோட்டை சிறையில் 8 மாதம் இருந்துள்ளார்.
ஜெஜெ டிவியில் மோசடி
கடந்த 1996-97ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது, அதற்காக வெளிநாட்டு நிறுவனங்களில் பல கோடி ரூபாயை சட்டவிரோத பரிமாற்றத்தின் மலம் முதலீடு செய்தது உள்ளிட்ட புகார்கள் உள்ளன. மத்திய அரசின் அனுமதியின்றி செய்யப்பட்ட இந்த பணப்பரிவர்த்தனை குற்றத்திற்காக வி.கே.சசி கலா, பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
விசாரணையில் வழக்கு
ஜெ.ஜெ.டிவிக்கு கருவிகள் இறக்குமதி செய்ததில் மோசடி என சசி, பாஸ்கரன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ரூ.7 கோடி மோசடி
இந்நிலையில் இன்று அரசு வேலை மற்றும் அதிமுகவில் பொறுப்பு வாங்கித் தருவதாக கூறி ரூ.7 கோடி மோசடி செய்ததாக பாஸ்கரன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 18 பேர் சென்னை, நீலாங்கரை போலீசில் புகார் அளித்துள்ளனர்.