அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா அக்கா மகன் பாஸ்கரன் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்!
ஜெ. ஜெ. டிவிக்கு கருவிகள் வாங்கிய விவகாத்தில் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் 2வது முறையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக சசிகலாவின் அக்கா மகன் பாஸ்கரன் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
சென்னையில் வசித்து வரும் சசிகலாவின் அக்கா மகனான டிடிவி பாஸ்கரன் தலைவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா டிவியில் பொறுப்பில் இருந்த இவர், பிறகு அதிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார்.
ஜெயா டிவியில் வேலை பார்த்த போதே மோசடி புகாரில் பாளையங்கோட்டை சிறையில் 8 மாதம் இருந்தார். கடந்த 2013ம் ஆண்டு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 1996-97ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியது, அதற்காக வெளிநாட்டு நிறுவனங்களில் பல கோடி ரூபாயை சட்டவிரோதமாக டாலர்களாக முதலீடு செய்தது, மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக சசி கலா, பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 20 ஆண்டுகளாக எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜெ.ஜெ.டிவிக்கு கருவிகள் இறக்குமதி செய்ததில் மோசடி செய்ததாக பாஸ்கரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் பாஸ்கரன் கடந்த 4ம் தேதி ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜரான பாஸ்கரன் தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என வாதம் செய்தார்.
ஆனால் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்த நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இன்றைய விசாரணையின் போது அரசுத் தரப்பு சாட்சியங்கள் குறுக்கு விசாரணை செய்யப்பட் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.