அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் - திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்
அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் அமைதியாக அமர்ந்து சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பத்தாண்டுகளுக்கும் மேலாக பொருளாளராக இருந்த பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒ.பன்னீர் செல்வத்திற்கு பதிலாக அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். போயஸ் தோட்டத்தில் மூத்த கட்சித்தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமில்லாத பதவியாக பொருளாளர் பதவி மாறிவிட்டதாக பேசப்பட்டது. காரணம் அதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்தவர்களின் அரசியல் அஸ்தமனமாகிப் போனது என்பதுதான். இது ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இப்போது சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
சசிகலாவிற்கு எதிராக சராமரி குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார் ஓ.பன்னீர் செல்வம். தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக கூறினார். பன்னீர் செல்வத்தின் பேட்டி தமிழக அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது. இதனையடுத்து போயஸ்தோட்டத்தில் சசிகலா உடன் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின்னர் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி உத்தரவிட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
ஒ.பன்னீர் செல்வத்திற்கு பதிலாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்துள்ளார் சசிகலா. இவர் ஏற்கனவே அதிமுக பொருளாளராக இருந்து அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.