ஓபிஎஸ்ஸை ராஜினாமா செய்ய சொன்னது ஏன்?.. உப்பு சப்பில்லாத காரணம் கூறிய சசியின் நவரச பேட்டி..பிளாஷ்பேக்
ஓ. பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தது ஏன் என்பதற்கு சசிகலா ஒரு உப்பு சப்பில்லாத காரணத்தை கூறியதை மறக்க முடியுமா.
Recommended Video
சென்னை: முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் திமுகவினரை பார்த்து சிரிக்கிறார் என்று உப்பு சப்பில்லாத ஒரு காரணத்தை கூறிய இந்த இனிய நாளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்ததன் மூலம் தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்தவர் பன்னீர் செல்வம். மேலும் சாந்தமாக இருந்த சசிகலாவின் நவரசத்தை இந்த தமிழகம் காணும் அளவுக்கு அவரை கோபத்தில் ஆழ்த்தியவரும் அவரே.
சசிகலா முதல்வராக ஆசைப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி ஓபிஎஸ்ஸை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தார்.
ஓபிஎஸ் வாக்குமூலம்
சசிகலா தரப்பினரும் மூத்த அமைச்சர்களும் நிர்பந்தத்தின் பேரிலேயே தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் கொட்டித் தீர்த்துவிட்டார். அன்றைய தினம் சசிகலாவை கோபத்தின் உச்சத்துக்கே ஓபிஎஸ் கொண்டு சென்றுவிட்டார்.
நவரசம்
ஓபிஎஸ் ஜெயலலிதா சமாதியில் சசிகலா குறித்து புட்டு புட்டு வைத்தவுடனே போயஸ் கார்டனில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ்ஸை துரோகி என்ற அவர், எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அப்போது அவர் உப்பு சப்பில்லாத காரணத்தையும் கூறினார்.
ஸ்டாலினை பார்த்து சிரித்த ஓபிஎஸ்
சட்டசபையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து முதல்வராக இருந்த ஓபிஎஸ் சிரித்தார். இதன் மூலம் அவர்களது ரகசிய கூட்டணி குறித்து என்னிடம் மூத்த அமைச்சர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கட்சியின் நலன் கருதி அவரை ராஜினாமா செய்ய செய்தேன் என்று கூறிய அவரின் முகத்தில் எத்தனை கோபங்கள். போயஸ் தோட்டத்தில் ஜெ. மறைவால் சோகமாக இருந்தவரின் முகத்தில் இத்தனை பாவனைகளாக என்று தமிழகமே பார்த்து வியந்தது.
திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்
இதையடுத்து அதிமுவின் முக்கிய பதவியான பொருளாளர் பதவியை ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறித்தார். அப்பதவியை திண்டுக்கல் சீனிவாசனிடம் கொடுப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அறிவிப்பதாக சசிகலா கூறினார்.