எம்.ஜி.ஆர் போட்ட ரூல்சை மீறி சசிகலா பொதுச் செயலாளரானாரா? பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்
அதிமுக கட்சி சட்டங்களை உருவாக்கிய குழுவில் பி.எச்.பாண்டியன் இருந்தது உண்மைதான். ஆனால் எம்.ஜி.ஆர் ஏன் அப்படி ஒரு ரூல்ஸ் உருவாக்கினார் என்பது எம்.ஜி.ஆருடன் இருந்த எனக்குத்தான் தெரியும்.
சென்னை: சென்னையில் நிருபர்களிடம் பேசிய அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க பொதுக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது என்று பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.
எம்ஜிஆரை திமுக பொதுக்குழுதான் கட்சியைவிட்டு நீக்கியிருந்தது. எனவே அவர் மனவருத்தம் காரணமாக, பொதுக்குழு மட்டும் இதுபோன்ற முடிவை தீர்மானிக்க கூடாது. எல்லா உறுப்பினர்களும் சேர்ந்து பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையை அதிமுகவில் எம்ஜிஆர் கொண்டுவந்தார். வேறு எந்த கட்சியிலும் இப்படி ஒரு விதிமுறை கிடையாது.
இப்போது அதிமுகவை வழிநடத்த ஒரு பொதுச்செயலர் தேவை. ஆனால் அனைவரிடமும் வாக்குப்பதிவு நடத்தி பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க போதிய கால அவகாசம் இல்லை. எனவே பொதுக்குழு கூடி, சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக பரிந்துரை செய்தது. அதேநேரம், பொதுக்குழு உறுப்பினர்களின் வாக்களிப்பு உரிமையும் பறிக்கப்படவில்லை. தேவைப்படும்போது பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில் பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும். இப்போதைக்கு பொதுச்செயலராக நியமிக்க பொதுக்குழு சட்டத்தில் வாய்ப்புள்ளது.
ஆனால் பி.எச்.பாண்டியன் அவரது மகன் பெரிய வழக்கறிஞர்கள். ஜெயலலிதாவையே சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்க வைத்தவர்கள் இல்லையா.. (சிரிப்பு), அதனால் அவர்கள் அப்படித்தான் ரூல்ஸ் பேசுவார்கள். சசிகலா பொறுப்பு பொதுச்செயலராக இருப்பதால் இப்போது கட்சி நியமனங்களை செய்கிறார். கட்சியின், நிரந்தர பொதுச்செயலராக தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரிடமும் வாக்களிப்பு பெறப்படும்.
அதிமுக சட்டங்களை உருவாக்கிய குழுவில் பி.எச்.பாண்டியன் இருந்தது உண்மைதான். ஆனால் எம்.ஜி.ஆர் ஏன் அப்படி ஒரு ரூல்ஸ் உருவாக்கினார் என்பது எம்.ஜி.ஆருடன் இருந்த எனக்குத்தான் தெரியும். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.