ஜெ., சிகிச்சை ஐபோன் வீடியோக்கள்; கார்டன் கலாட்டா! - வில்லங்கத்தை அவிழ்க்குமா விசாரணை ஆணையம்?
சசிகலா கையில் இருந்த ஐபோன் வசம் உள்ள வீடியோக்கள் வெளியானால், தமிழக அரசியல் சூழல்கள் மாறும் என்கின்றனர் மன்னார்குடி சொந்தங்கள்.
சென்னை: ஜெயலலிதா தொடர்பான வீடியோக்கள் அனைத்தும் மன்னார்குடி உறவினர் ஒருவரிடம் பத்திரமாக இருக்கின்றன. அவை இப்போது வெளியாக வாய்ப்பு இல்லை. அந்த வீடியோக்ள் வெளியானால் தமிழக அரசியல் சூழ்நிலை மாறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி, வரும் 5ஆம் தேதியில் இருந்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்க இருக்கிறார்.
போயஸ் கார்டனில் இருந்து மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் சிகிச்சை வரையில் நடந்த விவகாரங்களை அவர் விசாரிக்க இருக்கிறார். சசிகலா கையில் இருந்த ஐபோனில்தான் அத்தனை காட்சிகளும் பதிவாகியுள்ளன.
ஆம்புலன்ஸ்சில் ஜெயலலிதா
போயஸ் கார்டனில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு 10 மணிக்கு, தடுப்பு அரண்களை மீறி அப்போலோ ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ஜெயலலிதா, அதன்பிறகு கார்டன் திரும்பவில்லை.
ஜெயலலிதா மரணம்
75 நாட்கள் தொடர் சிகிச்சையின் முடிவில் அவர் இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவும் சிறை சென்றுவிட, ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற போராடி வருகிறார் தினகரன். தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவர் கோரிய அவகாசமும் மறுக்கப்பட்டுவிட்டது.
சிபிஐ விசாரணை கேட்ட சசிகலா
பன்னீர்செல்வத்துக்குக் கொடுத்த வாக்குறுதியை அடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ' இந்த விசாரணையைவிட சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் நன்றாக இருக்கும்' என அதிர வைத்தார் திவாகரன் மகன் ஜெயானந்த்.
ஜெயலலிதா வீடியோ சர்ச்சை
அதேநேரம், ' அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையே அனுமதிக்கவில்லை. முறையான விசாரணை நடந்தால் வீடியோக்களை சமர்ப்பிப்போம்' எனவும் பேட்டியளித்தார் தினகரன். இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
சிகிச்சை ரகசியம்
அப்போலோ ஊழியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். " தொடக்கத்தில் இருந்தே ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விஷயங்களை டாக்டர்.சிவக்குமார்தான் கவனித்து வந்தார். அவருடைய உடல்நிலை குறித்த அத்தனை தகவல்களும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனைக்குள் வந்த பிறகு அதே ரகசியம் காக்கப்பட்டது.
ஜெயலலிதா உடல்நிலை
அதையும் மீறி இந்தத் தகவல்களை வேவு பார்த்த அப்போலோ நர்சுகள் மூன்று பேர் பணியில் இருந்தே நீக்கப்பட்டனர். யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுக்க முயற்சித்த பயிற்சி மருத்துவர்களும் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். சில அரசியல் கட்சிகளுக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்கள் தேவையாக இருந்தன. இதற்காக அப்போலோ ஊழியர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தனர்.
ஜெயலலிதா நினைவு திரும்பினார்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது தளத்தின் கண்காணிப்பாளரும் இடமாற்றம் செய்யப்பட்டார். அந்தளவுக்கு மிகுந்த கவனத்தோடு தகவல்கள் வெளியே போகாமல் பார்த்துக் கொண்டார் சசிகலா. மயக்க நிலையில் இருந்து ஜெயலிதா இரண்டு நாட்களுக்குப் பிறகு கண்விழித்தார். அப்போது சசிகலாவுடன் வாக்குவாதம் செய்தார். அது ஏதோ இயல்பாக கார்டனுக்குள் நடக்கும் சண்டை போலவே இருந்தது. அதன்பிறகு அடிக்கடி மயக்க நிலைக்குச் சென்றுவிடுவார்.
ஜெயலலிதா முன்னேற்றம்
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டின் கண்காணிப்புக்குள் வந்த பிறகு, உடல்நிலையில் ஓரளவு தேறி வந்தார். இந்த நாட்களில்தான் தன்னிடம் இருந்த ஐபோனில் வீடியோக்களை எடுத்தார் சசிகலா. நர்ஸ் ஒருவரிடம் போனைக் கொடுத்தும் வீடியோ எடுத்தார். அவர் ஜெயலலிதாவுடன் இயல்பாகப் பேசுவது போன்ற காட்சிகள்தான் அவை.
சசிகலாவின் திட்டம்
சைகையால் அவரை அழைத்து ஏதோ சொல்ல முயற்சிப்பது போன்ற காட்சிகளும் அதில் அடக்கம். சிறிய அளவில் 8 வீடியோக்கள் வரை எடுத்திருக்கிறார். ' அம்மாவைக் கொடுமைப்படுத்தவில்லை. அவர் என்னுடன் இயல்பாகத்தான் இருந்தார்' எனத் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கு இது பயன்படும் என சசிகலா நினைத்திருக்கலாம்.
கொந்தளிப்பு உருவாகும்
வெளித்தோற்றத்தில் மக்கள் பார்த்த ஜெயலலிதாவுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம்தான் வீடியோக்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டக் காரணம். ' இப்படி இருக்கும் அளவுக்கா அவரைக் கொடுமைப்படுத்தினார்கள்?' என்ற தோற்றம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் வெளியிட மறுக்கிறார்கள். எந்த விசாரணை நடந்தாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் வரப் போவதில்லை" என்கின்றனர் விரிவாக.
வீடியோக்கள் பத்திரம்
" ஜெயலலிதா தொடர்பான வீடியோக்கள் அனைத்தும் மன்னார்குடி உறவினர் ஒருவரிடம் பத்திரமாக இருக்கின்றன. அவை இப்போது வெளியாக வாய்ப்பு இல்லை. குடும்ப உறவினர்களின் அடுத்தடுத்த மரணமும் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை நினைத்துத்தான் சசிகலா வேதனைப்படுகிறார்.
நாடகம் நடத்தியது யார்?
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் எம்.எல்.ஏவாகவோ அமைச்சர்களாகவோ இல்லை. எந்த அதிகாரமும் சசிகலாவிடம் இல்லை. மோடி நினைத்திருந்தால் அந்த நிமிடமே சசிகலா குடும்பத்தை அப்புறப்படுத்தியிருக்க முடியும். சசிகலாவை கொலைகாரி எனக் காட்டுவதற்காக திட்டம் போட்டு நடத்தப்பட்ட நாடகம் இது.
குற்றவாளியாக காட்ட திட்டம்
இந்த நாடகத்துக்கு மத்திய அமைச்சர் ஒருவரும் உடந்தையாக இருந்தார். எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தபோது, அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டன. அதையும் மீறி குற்றவாளி எனக் காட்டுவதன் பின்னணியில் மிகப் பெரிய சதி உள்ளது. இதற்கு தமிழக அரசில் உள்ளவர்களும் துணை போகிறார்கள். சசிகலா குடும்பத்திடம் உள்ள எட்டு வீடியோக்களும் ஒருநாள் வெளியில் வரத்தான் போகிறது" என்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள்.