சசிகலாவை திஹார் சிறைக்கு மாற்ற வேண்டும்: சட்டபஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தல்
சென்னை: பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை திஹார் சிறைக்கு மாற்ற வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த சிவ இளங்கோ வலியுறுத்தியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய 5 அறைகள் சிறையில் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது டிஐஜி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் பார்வையாளரை சந்திக்க ஒரு அறையும், டிவி பார்க்க, யோகாசனம் செய்ய என ஒவ்வொரு அறையும் இருந்துள்ளது. சொகுசு வசதிகளுக்காக சசிகலா தரப்பில் இருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த சிவ இளங்கோ, ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள சசிகலா, சிறை விதிகளை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டால் மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும். சிறையில் சசிகலாவுக்கு உதவி செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புகாருக்குள்ளான சிறைத்துறை டிஜஜி சத்தியநாராயண ராவ் தவறுசெய்துள்ளது உறுதி செய்யப்பட்டால் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். சசிகலாவை பெங்களூர் சிறையில் இருந்து டெல்லி திஹார் சிறைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.