நியாயப்படி பார்த்தா எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுச் செயலாளர் பதவியைக் கொடுத்திருக்கனுமே!
நியாயப்படி பார்த்தால் எடப்படா பழனிச்சாமியிடம் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா கொடுத்திருக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
சென்னை: தம்பித்துரை, சி.ஆர். சரஸ்வதி போன்றோரின் கூற்றுப்படி பார்த்தால் முதல்வர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகிய இரு பதவிகளும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியிடம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அதை விட்டு விட்டு ஜெயலலிதாவால் கட்சியை விட்டு தூக்கி வீசப்பட்ட டிடிவி தினகரனை அவசரம் அவசரமாக கட்சியில் சேர்த்து இந்தா புடி துணைப் பொதுச் செயலாளர் பதவி என்று அள்ளிக் கொடுத்திருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவின் விசுவாசிகள் குறிப்பாக சி.ஆர்.சரஸ்வதி, தம்பித்துரை போன்றோர் இதை வாய் மூடி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுான் ஆச்சரியமாக உள்ளது.
சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று ஆரம்பத்தில் குரல் கொடுத்த ஆர்.பி. உதயக்குமார், தம்பித்துரை, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட பலரும் கூறிய ஒரே காரணம், இரு பதவிகளும் ஒருவரிடமே இருக்க வேண்டும். இரட்டை அதிகாரம் இருக்கக் கூடாது. அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். "அம்மா" இருந்தவரை அப்படித்தான் இருந்தது.
இரு பதவிகளும் ஒ!ருவரிடம்தானே இருக்க வேண்டும்
இப்போது "சின்னம்மா" பொதுச் செயலாளராகியுள்ளார். அவரிடம்தான் முதல்வர் பதவி இருக்க வேண்டும். அதுதான் நியாயம் என்று அடித்துப் பேசினார்கள். ஏன் பொன்னையனே கூட அப்படித்தான் பேசி வந்தார். அப்படித்தான் பேசப் பழகிக் கொண்டனர் சசிகலா அதிமுகவினர் அனைவரும்.
ஏன் தூக்கிக் கொடுத்தார்
இப்போது அப்பாவி அதிமுகவினரின் குழப்பம் என்னவென்றால் "அம்மா"வால் நீக்கப்பட்ட தினகரனை அவசரம் அவசரமாக கூட்டி வந்து எதற்காக துணைப் பொதுச் செயலாளர் பதவியை தூக்கிக் கொடுத்தார் சசிகலா என்றுதான். உண்மையில்சசிகலா செய்திருக்க வேண்டியது தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதுதான்.
அதுதானே நியாயம்!
இரு பதவிகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் சசிகலா ஆதரவு தலைவர்களின் நிலைப்பாடு. இதைச் சொல்லித்தான் ஓ.பன்னீர் செல்வத்தை கார்னர் செய்தனர் அவர்கள். அதன்படி தற்போது பொதுச் செயலாளர் பதவியை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடியாரிடம்தான் சசிகலா முறைப்படி கொடுத்திருக்க வேண்டும். அதுதான் நியாயமானதும் கூட என்று அதிமுகவினர் கருதுகிறார்கள்.
திண்ணை தினகரன்!
அதை விட்டு விட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த தினகரனை கூட்டி வந்து வீட்டுக்குள் விருந்து வைக்கும் சசிகலாவின் செயல் ஜெயலலிதாவின் உண்மை விசவாசிகளுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.