அஷ்டமி, நவமி முடிந்து முதல்வராகும் சசிகலா? புது அமைச்சரவையில் பலருக்கு கல்தா?
சசிகலா முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. இதற்காக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நாளை கூட்டுகிறார். அவரது அமைச்சரவையில் பலர் நீக்கப்படலாம், புதிதாக சிலர் சேர்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: அஷ்டமி, நவமி முடிந்து வளர்பிறை தசமி தினத்தன்று தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளாராம். தை பூசத்திற்கு முதலில் பதவியேற்கலாம் என்று ஜோதிடர்கள் நாள் குறித்து கொடுத்துள்ளார்களாம்.
அவரது அமைச்சரவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இப்போதைக்கு இடமளிக்கப்படாது என்று போயஸ்கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அதன் பின்னர் முதல் முறையாக கடந்த மாதம் 27ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் முக்கிய முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
எம்.எல்.ஏக்கள் கூட்டம்
தற்போது 2வது முறையாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஞாயிறன்று கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா மீண்டும் கூட்டியுள்ளார். ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில் மீண்டும் ஒரு வார இடைவெளியில் மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை சசிகலா கூட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராகிறார் சசிகலா
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை, தமிழக முதல்வராக தேர்வு செய்யப்படுவதற்கு எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது.
அஷ்டமி, நவமி முடிந்து பதவியேற்பு
ஞாயிறன்று மாலை சென்னை வரும் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அளிக்க உள்ளார்கள். அதையடுத்து, சசிகலா தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஷ்டமி, நவமி முடிந்து வளர்பிறை தசமி தினத்தன்று தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளாராம். தை பூசத்திற்கு முதலில் பதவியேற்றகலாம் என்று ஜோதிடர்கள் நாள் குறித்து கொடுத்துள்ளார்களாம்.
அமைச்சரவை பட்டியல்
தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பதவியேற்க திட்டமிட்டுள்ளதை அடுத்து புதிய அமைச்சரவை பட்டியல் தயாராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியும், பொதுப்பணித்துறை தஞ்சாவூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ரெங்கசாமிக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் நீக்கம்
அமைச்சர் வேலுமணியிடமிருந்து உள்ளட்சித்துறையை பறித்து கே.ஏ.செங்கோட்டையனுக்கு வழங்கப்படுவதால், அவருக்கு தொழில்துறை வழங்கப்படுகிறதாம். எடப்பாடி வசமிருந்த பொதுப்பணித்துறைதான் ரெங்கசாமி வசமாகப் போகிறதாம். சரோஜா, துரைக்கண்ணு, விஜய பாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, வளர்மதி, நிலோபர் ஆகியோர் நீக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜி
கடந்த முறை ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க பலமான சிபாரிசு செய்யப்பட்டதாம், ஆனால் சசிகலா விரும்பவில்லையாம். எனவே செந்தில்பாலாஜி மீண்டும் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தால் சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காரில் ஏற நேரம் கைகூடி வரவில்லை என்றே கூறப்படுகிறது.