வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது... ஓபிஎஸ் மீது தினகரன் கோஷ்டி வெற்றிவேல் பாய்ச்சல்
வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏறிவிட்டது என்றும் பழைய பல்லவியை பாடுகிறார் என்றும் ஓபிஎஸ் குறித்து சசிகலா அணியினர் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
சென்னை: சசி குடும்பம் கட்சியில் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஓபிஎஸை வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏறிவிட்டதாக சசிகலா கோஷ்டி எம்எல்ஏ வெற்றிவேல் சாடியுள்ளார்.
இரு அணிகளும் இணைய எந்த நிபந்தனையும் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதையடுத்து பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் நேற்று முதல் அனல் பறந்தது.
இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைக்கு சசி கோஷ்டி பம்பரமாக சுழன்று வேலை பார்த்தது. இந்நிலையில் அதிமுகவில் சசிகலா குடும்பம் இருக்கும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிரடியாக அறிவித்தார்.
ஓபிஎஸ்க்கு எதிராக விமர்சனம்
இதன்மூலம் இரு அணிகளும் இணைவது தொடர்பாக எழுந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒபிஎஸின் நிலைப்பாட்டுக்கு சசிகலா கோஷ்டியினர் எதிர்ப்புத் தெரிவித்து விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
முறுங்கை மரத்தில் வேதாளம்
ஓபிஎஸின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கோஷ்டி எம்எல்ஏ வெற்றிவேல் வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏறிவிட்டது என சாடினார். மேலும் பேச்சு வார்த்தை நடத்த யாரிடமும் மண்டியிடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து கட்சியில் இருப்பார்கள்
தினகரனும் சசிகலாவும் தொடர்ந்து கட்சிப்பொறுப்பில் இருப்பார்கள் என்றும் வெற்றிவேல் எம்எல்ஏ கூறினார். தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்எல்ஏ இவ்வாறு கூறினார்.
பழை பல்லவியை பாடுகிறார்
இதேபோல் அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச் செல்வனும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் பழைய பல்லவியையே பாடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.