விறுவிறுன்னு சுதந்திரமாக செயல்படுகிறாரே... ஓபிஎஸ் மீது கடும் காட்டத்தில் போயஸ் கார்டன்
முதல்வர் ஓபிஎஸ் தங்களை கலந்து ஆலோசிப்பது இல்லை என காட்டத்தில் இருக்கிறதாம் போயஸ் கார்டன். அதிமுக பொதுச்செயலராகிவிட்ட நிலையிலும் தம்மிடம் முதல்வர் ஓபிஎஸ் ஆலோசிப்பதில்லை என்பது சசிகலா தரப்பு கோபமாம்.
சென்னை: அதிமுக பொதுச்செயலர் பதவியை கைப்பற்றிய பின்னரும்கூட தம்மை எதுவும் கலந்து ஆலோசிக்காமல் சுதந்திரமாக செயல்படுகிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் என சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலர் நாற்காலியில் அமர்ந்த சசிகலா, முதல்வர் பதவிக்கு அடிபோட்டார். ஆனால் மத்திய அரசு சசிகலா வசம் தமிழக அரசு நிர்வாகம் போவதை விரும்பவில்லை.
மோடி அட்வைஸ்
இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு வரவழைத்து 'சுதந்திரமாக' செயல்படுங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதையடுத்து சசிகலாவின் போயஸ் கார்டன் பக்கம் ஒரு வாரம் போகாமலேயே இருந்தார் ஓபிஎஸ்.
போட்டி அறிக்கைகள்
பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவழைத்து அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தையும் மன்னார்குடி கோஷ்டி வாங்கி வைத்துக் கொண்டது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு போட்டியாக சசிகலாவும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
கண்டுகொள்ளாத ஓபிஎஸ்
ஒருகட்டத்தில் தம்முடைய அறிக்கைதான் முதலில் போக வேண்டும் என்றெல்லாம் கூட சசிகலா உத்தரவு பிறப்பித்தும் பார்த்தாராம். ஆனால் அதைபற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ஓபிஎஸ் தாம் ஒரு முதல்வர் என்பதை நிரூபிக்கும் வகையில் சுதந்திரமாக செயல்பட்டு வருகிறார்.
அதிருப்தியில் கார்டன்
கிருஷ்ணா நதிநீர் பிரச்சனைக்காக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கப் போகும் விஷயத்தை கூட சசிகலாவுக்கு தெரிவிக்கவில்லையாம் முதல்வர் ஓபிஎஸ். கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கு வந்த பின்னரும் கூட இப்படி ஓபிஎஸ் தம்மை கண்டு கொள்ளாமல் இருப்பதால் சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லையாம்.