மதுரை மீனாட்சி, பழனி முருகனை வழிபட்ட சசிகலா.. ஜெ. வெற்றிக்காக!
மதுரை: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஊர் ஊராகப் போய் சாமி கும்பிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று காலை அவர் மதுரைக்கு வந்தார். அங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டார். அதைத் தொடர்ந்து பழனி சென்று முருகன் கோவிலிலும் சாமி கும்பிட்டார்.
சட்டசபைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் தயாராகி வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுக்களும் சூடு பிடித்துள்ளன.
இந்த நிலையில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும், அவர் மீதுள்ள சுப்ரீம் கோர்ட் வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும் என்று அவர் கோவில் கோவிலாகப் போய் சாமி கும்பிட்டு வருகிறார்.
பல்வேறு கோவில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வரும் அவர் சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கும்பாபிஷேகத்திலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை மதுரை வந்த சசிகலா அங்குள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜையுடன் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து அவர் பழனிக்குப் புறப்பட்டுப் போனார். அங்கும் தண்டாயுதபாணி திருக்கோவிலுக்குச் சென்று அவர் சிறப்பு பூஜையுடன் சாமி கும்பிட்டார்.
அவருடன் இரு பெண்களும் வந்திருந்தனர். அதிக கூட்டம் இல்லாமல் அமைதியான முறையில் சசிகலா கோவில்களுக்கு வந்து சென்றார்.
இரு கோவில்களிலும் சாமி கும்பிட வந்தோர், சசிகலாவும் சாமி கும்பிட வந்ததைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.