திருச்செந்தூர் கோவிலில் சசிகலா... சூரசம்ஹாரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி: திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி கோவிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சாமி கும்பிட்டார். அங்குள்ள சூரசம்ஹாரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார் சசிகலா.
மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வேட்பாளர் பட்டியலும் ஒருபக்கம் தயாராகி வருகிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று முதல்வரின் தோழி சசிகலா தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களுக்குச் சென்று சிறப்பு அபிசேகம் செய்து வழிபட்டு வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய ஆலயங்களுக்கு சென்று வந்த சசிகலா தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சசிகலா நேற்று காலை 9 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். சசிகலா வருகையை முன்னிட்டு காலை 7 மணி முதலே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சசிகலாவிற்கு வரவேற்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக காலையில் வந்த சசிகலாவை சண்முக விலாசம் மண்டபத்தில் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், கோவில் இணை ஆணையாளர் வரதராஜன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவில் அர்ச்சகர்கள், சசிகலாவுக்கு இலை விபூதி பிரசாதம் வழங்கினார்கள்.
சிறப்பு அபிஷேகம்
அதை தொடர்ந்து, மூலவர் சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு சென்றார். அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அலங்கார தீபாராதனை நடந்தது. சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தார்.
சூரசம்ஹாரமூர்த்திக்கு வழிபாடு
அதன் பிறகு சண்முகர் சன்னதி, சூரசம்ஹார மூர்த்தி சன்னதி, தட்சிணாமூர்த்தி, பெருமாள் சன்னதிகளுக்கு சென்றும் தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பிரகாரத்தை வலம் வந்த சசிகலா 10.30 மணியளவில் வடக்கு வாசல் வழியாக கோவிலை விட்டு வெளியேறினார்.
சுதாகரன் தரிசனம்
சசிகலாவின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலையில்தான் கோவில் பிரமுகர்களுக்கே தெரிவிக்கப்பட்டதாம். அதே நேரத்தில் சுதாகரனும் சாமி தரிசனம் செய்ய திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார் எனினும் இருவரும் தனித்தனியே சாமி கும்பிட்டு விட்டு சென்றனர். இருவருமே பத்தியாளர்களை சந்திக்கவில்லை.
தென் மாவட்டத்தில் போட்டி
முன்னதாக சசிகலா நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா முருகன் ஆலயம் உள்ள 'திரு' என்று தொடங்கும் தொகுதியில்தான் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சசிகலாவின் குமரி, தூத்துக்குடி மாவட்ட வருகை அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.