வெளியே வந்து எம்ஜிஆரை போல கூட்டம் கூட்டுவேன்.. நமக்கான நேரம் வரும்...சசிகலாவின் 'விளார் வீடு' சபதம்
அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவேன் என உறவினர்களிடம் சபதம் போட்டிருக்கிறாராம் சசிகலா.
Recommended Video
சென்னை: சிறையில் இருந்து வெளியே வந்து எம்ஜிஆரைப் போல கூட்டம் கூட்டி காட்டுவேன்.. நமக்கான நேரம் வந்தே தீரும் என தஞ்சாவூர் விளார் வீட்டில் உறவினர்களிடம் சசிகலா கூறியுள்ளார்.
சோளிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 20-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, 15 நாள் பரோல் விடுப்பில் வந்திருக்கிறார் சசிகலா.
அவர் வந்த வழியெங்கும் பொதுமக்களை நிறுத்தியும் கார்களை அணிவகுக்க வைத்தும் அதகளப்படுத்தினர் செந்தில் பாலாஜியும் பழனியப்பனும். இந்த அணிவகுப்பு மரியாதையை சசிகலா விரும்பவில்லை. இந்தக் கோபத்தை தினகரனிடம் வெளிப்படுத்தினார்.
சசிகலா ஆலோசனை
விளார் கிராமத்தில் நடராஜனால் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட பங்களாவில் சோகமயமாக அமர்ந்திருக்கிறார் சசிகலா. உறவுகள் சிலரிடம் மட்டும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றார் சசிகலா. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் 25-ம் தேதி தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார் தினகரன்.
உண்ணாவிரதத்துக்கு க்ரீன் சிக்னல்
'நடராஜன் மரணத்தால் உண்ணாவிரதம் தள்ளிப் போகும்' என நினைத்த நிலையில், தங்க.தமிழ்ச்செல்வன், ' காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காது. கர்நாடக தேர்தல் முடியும் வரை மத்தியில் உள்ளவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். மத்திய அரசுக்குப் பயந்து, இங்குள்ள அரசு செயல்படுகிறது. உண்ணாவிரதம் குறித்து கேட்டறிந்த சசிகலா, ' காவிரி விவகாரம் என்பது டெல்டா மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. விவசாயப் பெருங்குடி மக்களின் ஜீவாதாரம் அதில் அடங்கியிருக்கிறது. கணவர் இறந்ததைப் பற்றி நினைக்க வேண்டாம். உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள்' எனக் கூறிவிட்டார். மிகப் பிரமாண்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்' என்றார்.
வியூகம் வகுக்கும் சசிகலா
15 நாள் பரோல் காலத்தை மிக முக்கியமானதாகப் பார்க்கிறார் சசிகலா. ஆட்சியில் உள்ளவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். பரிசுத்தம் நகரில் உள்ள வீடுதான் நடராஜனின் உயிர் மூச்சாக இருந்தது. அந்த வீட்டின் ஒரு அறையில் அமர்ந்து கொண்டு விவாதித்து வருகிறார் சசிகலா. உறவினர்களிடம் சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
நாம் எஸ்டிஎஸ் அல்ல
அப்போது, ' நேரம் வரும்போது நமக்கு எதிராகச் செயல்பட்டவர்களும் நம்மை நோக்கி வருவார்கள். எம்.ஜி.ஆரை எதிர்த்துச் சென்ற எஸ்.டி.சோமசுந்தரம் என்னவானார் என்பதை அனைவரும் அறிவார்கள் (எம்.ஜி.ஆர். இருந்தபோதே அ.தி.மு.கவில் இருந்து விலகி, நமது கழகம் தொடங்கிச் சிலகாலம் நடத்தியவர் எஸ்.டி. சோமசுந்தரம்). இதனை உணர்ந்துதான், மீண்டும் அக்காவிடம்(ஜெயலலிதா) மன்னிப்புக் கேட்டுவிட்டு கார்டனுக்குள் நுழைந்தோம்.
நன்னடத்தையால் வருவேன்
இப்போது நமக்குச் சூழல் சரியில்லை. கணக்குப்படி பார்த்தால் இன்னும் 3 ஆண்டுகள் எனக்கு சிறைத் தண்டனை நிலுவையில் இருக்கிறது. நன்னடத்தை காரணமாக, இரண்டு ஆண்டுகளில் நான் வெளியே வந்துவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நமக்கான நேரம் வரும்
அப்போது எம்.ஜி.ஆர் திரட்டிய கூட்டத்தை நாம் திரட்டுவோம். நமக்குத்தான் மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிப்போம். அதுவரை அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். நமக்கான நேரம் வந்தே தீரும்' எனப் பேசியிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் இந்த விளார் வீடு சபதம் அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறதாம்.