சிறை செல்வதற்கு முன்.. கூடி நின்று கதறி அழுத சசிகலா குடும்பம்!
சரணடைவதற்காக பெங்களூரு செல்வதற்கு முன்னர், சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி என மன்னார்குடி குடும்ப உறுப்பினர் அனைவரும் கும்பலாக உட்கார்ந்து கதறி அழுதனர்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா நீதிமன்றத்தில் சரணடைய இன்று பெங்களூரு புறப்பட்டார்.
1991-1996 ஆகிய காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா கொடுத்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, கூவத்தூரில் தங்கியிருந்த சசிகலா நேற்று இரவு போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்திற்கு வந்தார். பின்னர், சரணடைய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கால அவகாசம் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
குவிந்த மன்னார்குடியினர்
இதனைத் தொடர்ந்து, போயஸ் கார்டனில் சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினார். மேலும், தஞ்சை, மன்னார்குடி பகுதியில் இருந்து அவரது உறவினர்களும் போயஸ் கார்டனில் குவிந்தார்கள்.
சரண் சசி
உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்காததால் பெங்களூரு செல்ல தயாரானார் சசிகலா. பெங்களூரு செல்வதற்கு முன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை வகுத்துக் கொண்ட சசிகலா அதுகுறித்து உறவினர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
கதறி அழுத்த சசி
பின்னர், சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் சிறை சொல்ல இருப்பதால் சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி, இளவரசி மகன் விவேக், மருமகன், இளவரசியின் மகள்கள், சுதாகரனின் குடும்பத்தார் என அனைவரும் சசிகலா சுற்றி உட்கார்ந்து கொண்டு சோகமே உருவாக இருந்தனர். சசிகலா புறப்படுவதற்கு சற்று முன் சசிகலா உள்பட ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
புறப்பாடு
கண்களை துடைத்துக் கொண்ட சசிகலா, பெங்களூரு செல்ல இளவரசியோடு காரில் புறப்பட்டார். போயஸ் கார்டனில் இருந்து நேராக ஜெயலலிதா நினைவிடம் சென்ற சசிகலா, அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஏதோ சொல்லி மூன்று முறை கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார். பின், அங்கிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்றார்.