சசிகலாவை கட்சியை விட்டு நீக்காதது ஏன்.. பரபரப்பான "பேக்கிரவுண்ட்" சம்பவங்கள்!
பொதுச்செயலர் பதவியில் இருந்து மட்டும் நீக்கப்பட்ட சசிகலா அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படாதது ஏன் என்பது குறித்து பரபர தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
சென்னை: அமைச்சர்களின் ராஜினாமா மிரட்டலைத் தொடர்ந்து அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலாவை நீக்கம் செய்யும் முடிவை ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படவில்லை.
கட்சியில் இருந்து நீக்கம் இல்லை
பொதுச்செயலர் நியமனத்தை ரத்து செய்த பொதுக்குழு ஏன் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்த போது, சசிகலாவின் பொதுச்செயலர் நியமனத்தை ரத்து செய்வதற்கே அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அமைச்சர்கள் மிரட்டல்
இருந்தபோதும் முதல்வர் எடப்பாடி தரப்பு அவர்களை சமாதானப்படுத்தி வைத்திருந்தது. ஒருகட்டத்தில் சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மேற்கு மண்ட லாபி உறுதியாக இருந்தது. அப்படி நீக்கினால் நாங்களும் எங்கள் ஆதரவு எம்.எ.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என அமைச்சர்கள் மிரட்டி இருக்கின்றனர்.
முதல் கட்டம்
இதனால் நேற்று முன்தினம் வரை சசிகலா தொடர்பாக எப்படி தீர்மானம் கொண்டுவருவது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதனையடுத்து முதல் கட்டமாக பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்குவோம்.. அமைச்சர்களை சமாதானப்படுத்திவிட்டு சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவோம் என ஊசலாட்டமாக முடிவு செய்து இன்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்.
அடுத்த கட்டமாக அதிரடி நீக்கம்
தற்போதைய நிலையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்-க்கு கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் நீக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அடுத்த கட்டமாக சசிகலாவை அதிமுகவில் இருந்தும் நீக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.