மீண்டும் சீற்றத்துடன் சீனுக்கு வரும் கோவை ராவணன்.. சசி உறவுகள் மீது கடும் அதிருப்தி!
திடீரென ஒதுக்கப்பட்ட சசிகலாவின் உறவினர் கோவை ராவணன் மீண்டும் தலையெடுக்க தொடங்குகிறார்.
சென்னை: கோவை மண்டலத்தில் கோலோச்சிய சசிகலா குடும்பத்து ராவணன் இப்போது மீண்டும் தலையெடுக்கத் தொடங்கி உள்ளார். தினகரன், திவாகரன் ஆகியோரது தவறான வழிகாட்டுதலால்தான் இப்போது ஒட்டுமொத்த குடும்பமுமே அத்தனை சொத்துகளையும் பறிகொடுத்து சிறைவாசம் அனுபவிக்கப் போகிறது என குமுறுகிறாராம் ராவணன்.
சசிகலாவுக்கு தூரத்து உறவினர் ராவணன். சசிகலா உறவினர்கள் தமிழகத்தை கூறு போட்டு ஆதிக்கம் செலுத்திய போது கோவை மண்டலத்தில் ராவணன்தான் ராஜா.
இன்றைக்கு பெரும் பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் ராவணனால் முன்னிறுத்தப்பட்டவர்கள்தான். தற்போது சசிகலா குடும்பத்து நபர்கள் 355 பேரிடம் வருமான வரித்துறை சோதனை நடந்த போதும் ராவணன் சிக்கவில்லை.
நடுத்தெருவில் ராவணன்
இதற்கு காரணமே ராவணனிடம் தற்போது எதுவும் இல்லை. எல்லாமே ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே சசிகலா உறவினர்களால் ‘சொந்த காரணங்களுக்காக' பறிமுதல் செய்து அம்போவென நடுத்தெருவில் விட்டுவிட்டனர்.
பெங்களூருவில் சந்திப்பு
ஆனால் அன்றும் இன்றும் ராவணனோ சசிகலா மீது பாசத்துடன்தான் இருக்கிறார். பெங்களூரு சிறையிலும் சசிகலாவை அடிக்கடி ராவணன் சந்தித்து வருகிறார். இதை சசிகலா உறவினர்கள் கடுமையாக எதிர்த்தும் வருகின்றனர்.
டூப்ளிகேட் ஜெயலலிதா
இந்நிலையில் சசிகலாவின் இந்த கதிக்கு காரணமே தினகரன், திவாகரனின் ஆலோசனைகள்தான். அதிகார "வெகாரி" பிடித்துப் போய் சசிகலாவை டூப்ளிகேட் ஜெயலலிதாவாக்கி நாடகமாட வைத்து ஒட்டுமொத்தமாக எல்லோரது எதிர்ப்பையும் சம்பாதிக்க வைத்துவிட்டனர்.
அவசரப்பட்டதுதான் காரணம்
இத்தனை எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கையில் வைத்திருந்த நாம் சரியான வியூகம் வகுத்து அமைதியாக செயல்பட்டிருந்தால் சிறைக்குப் போயிருக்க தேவையில்லை; சொத்துகளும் சிந்தாமல் சிதறாமல் பாதுகாக்கப்பட்டிருக்கும்; இதைவிட டெல்லி முதல் குமரி வரை அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருவாகியிருக்கவும் முடியும். எல்லாவற்றையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டனரே என குமுறுகிறாராம் ராவணன்.
ராவணனின் புதிய சபதம்
இனியாவது என்னுடைய டெல்லி தொடர்புகளை பயன்படுத்துங்கள்; மீண்டும் சரி செய்து காட்டுகிறேன் என புதிய சபதத்துடன் தூது விடும் படலத்தைத் தொடங்கியிருக்கிறாராம் ராவணன். ஆனால் சசிகலா உறவுகளே ராவணனின் மூவ்களை நறநறவென கடித்தபடியே பார்த்து கொண்டிருக்கின்றனராம்.