அன்று சங்கரலிங்கனார்.. இன்று சசி பெருமாள்.. இன்னும் எத்தனை உயிர் வேண்டும் மதுவை விரட்ட!
கன்னியாகுமரி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் போராட்டத்தின்போதே உயிரிழந்துள்ள நிலையில், அவர் போராடியதே மதுவால் தினம், தினம் சீரழியும் பல்வேறு குடும்பங்களுக்காகவும், சாராயம் என்ற அரக்கனால் போகும் உயிர்களைக் காப்பாற்றவும்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பாக இதே ஜூலை மாதத்தில்தான் இந்தியா முழுமைக்குமான மதுவிலக்கை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். இன்றும் போராட்டத்தின்போதே ஒரு காந்தியவாதி உயிரிழந்துள்ளார் மதுவிலக்கிற்காக.
தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக மட்டுமே அறியப்பட்ட தியாகி சங்கரலிங்கனார் இந்தியா முழுமைக்கும் பூரண மதுவிலக்கு உட்பட 12 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தவர் என்பதும் நோக்கத்தக்கது.
மதுவிலக்கு எதற்காக தமிழகத்தில் வரவேண்டும் என்று கேட்டால் ஒன்றல்ல, இரண்டல்ல காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
கொட்டிக் கிடக்கும் சாராயக் கடைகள்:
ஒரு காலத்தில் சாராயம் காய்ச்சி விற்கும் ஆட்கள் கூட எதோ சிலருக்குத்தான் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால், இன்றோ வீட்டில் உள்ள பெண்கள் முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் கூட எளிதாக குடிக்கும் வகையில் அரசின் டாஸ்மாக்கே குறைந்த விலையிலும், சலுகை விலையிலும் மதுவை விற்று வருகின்றது.
மூளையை மழுங்கடிக்கும் குடி:
பலாத்காரங்களும், கொலை, கொள்ளைகளும் அதிகரித்து காணப்படுவதற்கு குடி என்னும் அரக்கனே காரணம் என்ற ஆய்வுத் தகவலும் ஒருமுறை வெளியாகி இருந்தது. மூளையையே ஸ்தம்பிக்கச் செய்துவிடும் அளவிற்கான ஆல்கஹால் தொடர்ச்சியான உபயோகம் மூலமாக மூளைச் செல்களை மழுங்கடித்துவிடும் வல்லமை பெற்றுள்ளது. வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.
குடியில்லாமல் வாழ்வில்லை:
கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும் என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கையையே அழிக்கும் மது அரக்கன்:
மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகளை மட்டுமல்லாமல், அவரது குடும்பத்தினருக்கும் வருமானமின்மை, நிம்மதியின்மை, பொதுமக்களுக்கோ அச்சம், வெறுப்பு என ஒருவரின் மொத்த வாழ்க்கையையுமே பாதிக்கும் திறன் பெற்றது இந்த மதுவென்னும் அரக்கன்...
கைகோர்த்து கனவு கண்டால் மதுவிலக்கு நிச்சயம்:
அதனை ஒழிக்க உண்மையாய் பாடுபட்ட ஒருவரும் பலியாகிவிட்டார்... இனி என்ன செய்யப் போகின்றோம் நாம்? மாணவர்களையும், இளைஞர்களையும் கனவு காணச் சொன்ன கலாம் அவர்கள் விதைக்கப்பட்ட இந்நேரத்தில், இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தை மதுவில்லா மாநிலமாக்கலாம். கைகோர்ப்போமா?