ஏன் சென்னையை தனித் தொகுதியாக அறிவித்திருக்க வேண்டியதுதானே.. சசிகலா புஷ்பா கொந்தளிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மேயர் பதவியை தலித்துகளுக்கு ஒதுக்கி நாடார் சமுதாயத்தினருக்கு துரோகம் செய்திருக்கிறது அதிமுக என்று சசிகலா புஷ்பா எம்.பி. கொந்தளித்துள்ளார்.
சென்னையில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு வந்திருந்தார் சசிகலா புஷ்பா. அவரைக் கைது செய்ய போலீஸாரும் திட்டமிட்டுக் காத்திருந்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை உத்தரவு போட்டதால் போலீஸார் கைது செய்யும் முடிவைக் கைவிட்டனர்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பாவுக்கு ஒரு பெரிய இளைஞர் படையே பாதுகாப்பாக வந்திருந்தது. விமான நிலையம் முதல் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன்புரத்தில் உள்ள பண்ணையாரின் நினைவிடம் வரை அவர்கள் பாதுகாப்பாக சென்றனர். அங்கும் சசிகலாவைப் பார்க்க பெரும் கூட்டம் கூடி ஆர்ப்பரித்தபடி காணப்பட்டது.
ஒரு அரசியல் தலைவர் ரேஞ்சுக்கு சசிகலா புஷ்பாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா பேசுகையில், சென்னை மேயர் பதவியை தனித் தொகுதியாக அறிவித்து தலித் மக்களை உயர்த்தியிருக்கலாம். ஆனால் நாடார் சமுதாயத்திடமிருந்த தூத்துக்குடி மேயர் தொகுதியை தனித் தொகுதியாக அறிவித்து நாடாருக்கும் தலித் மக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறது அதிமுக அரசு என்றார் அவர்.
உங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு ஜெயலலிதா சொல்லட்டும் நான் ராஜினாமா செய்யத் தயார் என்றார் அவர்.