திருவண்ணாமலை சாத்தனூர் அணை திறப்பு.... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பியதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது.119 அடி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 115.40 அடி நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,426 கன அடி வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு நேரத்தில் அணை நிரம்பி சேதம் ஏற்படாமல் தடுக்க நீர் முன்கூட்டியே திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.