For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி ஒருவர் பலி : சிறுநீர் கழிக்க சென்றபோது பரிதாபம்!

Google Oneindia Tamil News

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மலைப் பகுதியில் பழுதான லாரியில் இருந்து இறங்கி, இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற சீனிவாசன் என்பவரை சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு ஏராளமான சரக்கு லாரிகள், வேன்கள் மற்றும் பஸ்களும் சென்று வருகின்றன. சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி கோவிலில் இருந்து திம்பம் மலைப்பாதை தொடங்குகிறது. திம்பம் மலை உச்சியை அடைய 27 கொண்டை ஊசி வளைவுககளைக் கடந்து செல்லவேண்டும்.

Sathiyamangalam: Leopard kills lorry mechanic

சமீபகாலமாக இந்த மலைப்பாதையில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், மாலை 6 மணிக்கு மேல் இந்தப் பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் இடையில் நிற்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த காய்கறி லோடு ஏற்றிய ஒரு மினி டோர் வேன் ஒன்று இந்த மலைப் பாதையில் பழுதானது.

அந்த மினி டோர் வேனை கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே உள்ள நொக்கலூரை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் ஓட்டிக்கொண்டு வந்தார். அந்த வேனில் அவருடன் அதே ஊரை சேர்ந்த சீனிவாசன் (30), ஜடையன் (25) ஆகியோரும் வந்தனர்.

வேனை உடனடியாக பழுது பார்க்க முடியாததால், மாற்று வாகனம் மூலமாக காய்கறியை அனுப்பி வைத்து விட்டு, பழுதான லாரியில் சீனிவாசனும், ஜடையனும் தூங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை தூங்கி எழுந்த சீனிவாசன், இயற்கை உபாதையைக் கழிக்க வண்டியில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

அப்போது வனத்துக்குள் இருந்து வந்த சிறுத்தை ஒன்று சீனிவாசனை திடீர் என்று தாக்கியது. தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள, சிறுத்தையுடன் சீனிவாசன் கடுமையாகப் போராடினார். ஆனால் சிறுத்தையின் பலத்துக்கும், ஆவேசத்துக்கும் ஈடுகொடுக்க முடியாததால் சீனிவாசன் நிலைகுலைந்து போனார். சீனிவாசனை கடுமையாகத் தாக்கிய சிறுத்தை, அவரை கடித்துக் கொன்றது.

நீண்ட நேரமாகியும் சீனிவாசன் திரும்பாததால், அவரைத் தேடி வண்டியில் இருந்து கீழே இறங்கிய ஜடையன், அருகிலிருந்த புதரில் சீனிவாசனின் உடலை சிறுத்தை கடித்துத் தின்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக சாலைக்கு விரைந்து வந்த ஜடையன், அவ்வழியே வந்த வாகனம் ஒன்றில் ஏறி பண்ணாரி வன சோதனை சாவடி வந்தடைந்தார். அங்கு சிறுத்தை தாக்கி சீனிவாசன் உயிரிழந்த தகவலை அவர் கூறினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் சீனிவாசனின் உடலை வனப்பகுதியில் இருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் திம்பம் பகுதியில் பீதி நிலவுகிறது.

English summary
In Sathiyamangalam forest area in Erode district, a lorry mechanic was killed by an leopard. His body was found in the bushes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X