இதைக் கூட கவனிக்காமல் முடங்கிக் கிடக்குதே இந்த அரசு.. விஜயகாந்த் கோபம்!
சென்னை: சாத்தூரில் ஓடும் பேருந்தில் கருப்பசாமி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை எல்லாம் கவனிக்காமல் தமிழக அரசு முடங்கி போயுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாத்தூரில் ஓடும் பேருந்தில் கருப்பசாமி என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி தமிழக மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ள நிலையில், அன்றாடம் செயின் பறிப்புகள், கொலை, கொள்ளை, ஓடும் ரயிலில் கோடிக்கணக்கான வங்கி பணம் திருட்டு, போன்ற பல அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே நடந்து முடிந்து பல நாட்களாகியும் இந்த சம்பவங்கள் எப்படி நடந்தது? யாரால் நடந்தது? என்பதை கூட நமது காவல்துறை கண்டறியமுடியாமல் திணறி வருகிறது.
இவற்றை எல்லாம் கவனித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு முடங்கி போய் உள்ளது. காவல்துறையை தன் இலாகாவாக வைத்து இருந்த ஜெயலலிதா 22 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று தான் முதலமைச்சரின் இலாக்காகள் நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களிடம் ஒப்படைக்க பட்டதாக அறிவித்துள்ளனர். முதலமைச்சரும், மந்திரிகளும் இல்லாமல் தலைமை செயலகம் முடங்கி போய் உள்ளது.
ஏற்கனவே கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படாமல் இருந்ததும் பெங்களூர் சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டு இருந்த போது பாம்புகள் உலாவும் இடமாக தலைமை செயலகம் மாற்றப்பட்டிருந்ததும் நாடறிந்ததே. இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதால் தலைமை செயலகம் வெறிச்சோடி மக்கள் நடமாட்டம் இல்லாத கூடமாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத துப்பாக்கி சூடு கலாச்சாரம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
நாம் தமிழ்நாட்டில் தான் உள்ளோமா? அல்லது வெளிநாட்டில் உள்ளோமா என்ற சந்தேகம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. முன் விரோதம் காரணமாக சாத்தூரில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம், துப்பாக்கி ஏந்தியவனுக்கு துப்பாக்கியால் தான் மரணம் என்பது பழமொழி. எனவே, பகையை வளர்க்காமல் நட்பு உணர்வோடு வாழ வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கா வண்ணம் அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.