சாத்தூர் துப்பாக்கிச்சூடு: 3 பெண்கள் உட்பட ஐவர் கைது- நவ.2 வரை சிறை!
நெல்லை: சாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரையும் நவம்பர் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற அரசுப் பேருந்தில் ஏறிய கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி சாத்தூர் அருகே கடந்த 12ம் தேதியன்று புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலையாளி தப்பி ஓடியதால் அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் அப்துல்லா என்பவரை கொலை செய்த வழக்கில் கருப்பசாமியின் அண்ணன்கள் சிறையில் உள்ளனர். இந்த கொலைக்கு பழிவாங்குவதற்காக கருப்புசாமி சுடப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
கடந்த 13ம் தேதி 9 பேரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்த நிலையில் மதுரை நீதிமன்றத்தில் அப்துல்லாவின் தந்தை முகமது ரஃபீக் சரணடைந்தார். அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அவர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மகாலட்சுமி என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். மகாலட்சுமி அந்த துப்பாக்கியை ஓ.மேட்டுப்பட்டி கண்மாய் பாலத்திற்கு அடியில் மறைத்து வைத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று மாலை துப்பாக்கியை மீட்ட போலீசார், கொலைக்கு உதவியதாக ரபீக் மனைவி பானு, பானுவின் தோழிகளான லதா, லட்சுமி, துப்பாக்கியை கொடுத்த வாசுமுத்து மற்றும் பாக்கியராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 5 பேரும் சாத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நவம்பர் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓடும் பேருந்தில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டது பழிக்குப் பழியாக நடைபெற்றதுதான் என்பது கடந்த ஒருவாரமாக நடைபெற்ற போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.