சதுரகிரியில் மீண்டும் வெள்ளம்... பலி எண்ணிக்கை 8 ஆனது... மலையேற பக்தர்களுக்கு தடை!
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பக்தர்களுக்கு மலையேற தடை விதிக்கப் பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள தாணிப்பாறை அருகே உள்ள சதுரகிரி மலைமேல் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அமாவசை தினத்தையொட்டி இந்தக் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாட்டிற்காக சென்றிருந்தனர்.
அப்போது கனமழை காரணமாக மலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் அடித்துச் செல்லப் பட்டனர். அவர்களில் 8 பேரின் உடல் இதுவரை மீட்கப் பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தின் போது மலையில் சிக்கிய சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பத்திரமாக மீட்கப் பட்டனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் சதுரகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது. காவல் துறையினரும், தீயணைப்பு படை வீரர்களும் தீவிரமாக செயல்பட்டு மலையில் சிக்கிக் கொண்ட பக்தர்களை மகாராஜாபுரம், அழகாபுரி வழியாக மாற்றுப்பாதையில் மலை அடிவாரத்துக்கு அனுப்பி வைத்தனர். மலைப் பகுதியில் யாரும் சிக்கியிருக்கிறார்களா என அவர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்த படி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் வழியாகவும் சதுரகிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்வதுண்டு. அவ்வாறு சென்றவர்களில் யாரும் வெள்ளத்தில் சிக்கினார்களா, ஓடைப்பகுதியில் உடல்கள் ஏதும் ஒதுங்கி உள்ளனா? என்பதை சாப்டூர் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உசிலம்பட்டியை சேர்ந்த ஒருவர் சதுரகிரி சென்றதாகவும், அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் போலீசாருக்கு புகார் வந்துள்ளது.
இதற்கிடையே, தொடர்ந்து சதுரகிரியில் மழை பெய்து வருவதால் பக்தர்கள் மலைக்குச் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. பலியானவர்களின் குடும் பத்திற்கு இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக தலா ரூ. 1.5 லட்சம் தமிழக அரசு அறிவித்துள்ளது.