மகள் சாவுக்கு சத்தியபாமா பல்கலை. நிர்வாகமே பொறுப்பு.. கோர்ட்டில் வழக்கு.. மாணவி பெற்றோர் கண்ணீர்
Recommended Video
சென்னை: சத்தியபாமா பல்கலைக்கழக விடுதியில் ராகமோனிகா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு, பல்கலைக்கழக நிர்வாகமே காரணம் என அவரது பெற்றோர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ளது சத்தியபாமா பல்கலைக்கழகம். இங்கு கணினி அறிவியல் படித்து வந்தார் ஆந்திராவை சேர்ந்த மாணவி ராகமோனிகா. இவர் நேற்று காலை நடந்த செமஸ்டர் தேர்வில் சக மாணவியின் விடைத்தாளைப் பார்த்து எழுதியதாகவும், இதனைக் கவனித்த பேராசிரியர் ஒருவர் ராகமோனிகாவை தேர்வறையை விட்டு வெளியேற்றியதாகவும், ஆடைகளைக் களையச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த மாணவி ராகமோனிகா பல்கலைக்கழகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தீ வைப்பு
இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியது. நேற்று இரவு, பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்கு வெளியே தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விடுமுறை அறிவிப்பு
இந்தநிலையில், சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஜனவரி 1ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் 6ம் தேதிவரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று பிறகு விடுமுறை அளிக்கப்படும். இப்போது வன்முறை காரணமாக முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில், மாணவியின் உடலை வாங்க சென்னை வந்த அவரது பெற்றோர், பிரேத பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தனர். அங்கு மகளின் நிலையை பார்த்து கதறி அழுதனர். ராகமோனிகாவின் மரணத்திற்கு கல்லூரி நிர்வாகம்தான் காரணம் என குற்றம்சாட்டினர்.
நீதிமன்றத்தில் வழக்கு
தேர்வறையில் காப்பியடித்ததாக ஒரு விவகாரத்தை எழுப்பி, கல்லூரி நிர்வாகம் மகள் மீது தப்பு இருப்பதை போல தவறாக மாற்றியுள்ளனர் என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் ராகமோனிகா இறந்த தகவலை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினார். ராகமோனிகா மரணத்திற்கு கல்லூரி நிர்வாகம் முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம் என்றும் அவர்கள் அழுகையோடு தெரிவித்துள்ளனர்.