கத்தி: திரையரங்கம் தாக்கப்பட்ட வழக்கு: அனைத்து மாணவர்களும் விடுதலை!
சென்னை: கத்தி திரைப்படம் வெளியாவதை கண்டித்து சென்னை சத்யம், உட்லண்ட்ஸ் திரையங்குகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவர் உட்பட பெரியார் திராவிடர் கழகத்தினர் 12 பேரும் நிபந்தனை ஜாமீனில் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
லைக்கா நிறுவனம் ராஜபக்சேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாக பெறப்பட்ட ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘கத்தி' திரைப்படத்திற்கு எதிராக போரட்டங்களை மேற்கொண்ட மாணவர்கள் மூவர் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஒன்பது பேர் சத்யம், உட்லண்ட்ஸ் திரையரங்கத்தை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பொய் வழக்கில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறக் கோரியும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரியது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் செம்பியன், பிரபா, பிரதீப் உட்பட பெரியார் திராவிடர் கழகத்தினர் 12 பேருக்கும் சென்னை எழும்பூர் செசன்சு நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நேற்று அரசு விடுமுறை என்ற காரணத்தால் கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று மாலை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்து விடுதலையான மாணவர்கள் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் அனைவருக்கும் சிறை வளாகத்திற்கு வெளியே தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.