நாளைமுதல் அமலாகிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
சத்தியமங்கலம்: புலிகள் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சத்தியமங்கலம் வனக்கோட்டம் நாளை முதல் புலிகள் காப்பகமாக மாற்றம் பெறுகிறது.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம்ஆனைமலை, நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை ஆகிய இடங்களில் புலிகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. அதைத் தொடர்ந்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுப்படி நாளை முதல் சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1.40 லட்சம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக அமல்படுத்தப்படுகிறது.
சத்தி வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் கர்நாடக வனப்பகுதியும், தெற்கே நீலகிரி மற்றும் கோவை வனக்கோட்டமும் கிழக்கே ஈரோடு வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்கு 25-க்கு மேற்பட்ட புலிகள் நடமாடுகின்றன. சத்தி வனக்கோட்டம் வனவிலங்குகள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் வனக்கோட்டம் மாவட்ட வனஅலுவலர் தலைமையில் செயல்பட்டு வந்தது. இனி, மாவட்ட வனஅலுவலர் நியமனம் இருக்காது. தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி நாளைமுதல் சத்தி வனக்கோட்டம் புலிகள் காப்பகமாகத் தகுதி உயர்வு பெறுகிறது.
மேலும் புலிகள் காப்பகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக அமலுக்கு வருவதால், இனி கள இயக்குநர் தலைமையில் வனத்துறையினர் செயல்படுவர். மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் இனி கள இயக்குநராகவும், மாவட்ட வனஅலுவலர்கள் துணை இயக்குநர்களாகவும் செயல்படுவர். சத்தி வனக்கோட்டத்தில் சத்தி, பவானிசாகர், தாளவாடி, தூக்கநாயக்கன்பாளையம் ஆசனூர் ஆகிய 5 வனச்சரகங்கள் செயல்பட்டு வந்தன.
தற்போது, பல்வேறு சரகங்களில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து, கேர்மாளம், தலமலை என மேலும் 2 வனச்சரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலிகள் காப்பம் அமலுக்கு வருவதால், சத்தி வனக்கோட்டம் 5-இல் இருந்து 7 சரகங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கென வனச்சரக அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்பாளையம், தலமலை ஆகிய வனச்சரகங்கள் சத்தியமங்கலம் துணை இயக்குனர் கட்டுப்பாட்டிலும், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய வனச்சரகங்கள் ஆசனூர் துணை இயக்குனர் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.