ஜெயலலிதா வீட்டு முன்பு மது ஊற்ற வந்த சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் கைது
சென்னை: முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன்பு மது ஊற்றிப் போராட்டம் நடத்தக் கிளம்பிய சட்டப் பஞ்சாயத்து இயக்கக்கத்தினரை போலீஸார் முன்கூட்டியே தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
காந்தியவாதி சசிபெருமாள் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் மது விலக்கு கோரி போராட்டங்கள் சூடு பிடித்தன. தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் போராட்டக் களமாக மாறியிருந்தது.
தற்போது இந்தப் போராட்டங்கள் சற்று குறைந்துள்ளன. இந்த நிலையில் மது விலக்கை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா முன்வராததைக் கண்டித்து அவரது வீட்டின் முன்பு மதுவை ஊற்றிப் போராட்டம் நடத்தப் போவதாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் தோட்டப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடத்தக் கிளம்பிய போராட்டக் குழுவினரை போலீஸார் முன்கூட்டியே தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.