விருதுநகரில் 4 லட்சம் வாக்குகளை பெற்று திமுக வெல்லும்: இது சாத்தூர் ராமச்சந்திரன் கணக்கு!
விருதுநகர்: லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ரத்னவேல் 4 லட்சம் வாக்குகளைப் பெற்று வெல்வார் என்று அம்மாவட்ட திமுக செயலர் சாத்தூர் ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தொகுதியின் தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
வணிக நகரான விருதுநகரை உள்ளடக்கிய விருதுநகர் தொகுதிக்கு வணிகம், தொழில், விவசாயம் மேம்படவும் வேலை வாய்ப்பினை பெருக்கவும் எடுக்க வேண்டிய நடைமுறைகளை பற்றி நன்கு தெரிந்துள்ள ஒரு வேட்பாளரை தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளார். அவர் இந்த மண்ணின் மைந்தர். ஏற்கனவே வியாபார தொழில் துறை சங்கத்தின் நிர்வாகியாக இருந்து பல ஆண்டுகளாக சேவை செய்தவர்.
அதன் அடிப்படையில் தென் மாவட்டங்களுக்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியை பொருத்தமட்டில் 13 லட்சத்து 13 ஆயிரத்து 35 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில் 11 லட்சம் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 5 முனை போட்டி உள்ளதால் 3 லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெறும் வேட்பாளருக்கு வெற்றி கிடைக்கும். இது தான் கணக்கு.
தி.மு.க.வை பொருத்தமட்டில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலேயே விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையிலும் 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேல் வாக்குகள் பெற்றுள்ளோம். தற்போது புதியதாக புதியதமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் நம்முடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
தி.மு.க. வேட்பாளரை பொருத்தமட்டில் அவரது சொந்த செல்வாக்கும் இப்பகுதியில் உள்ளது. எனவே சட்டமன்ற தேர்தலைவிட நமக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
குறைந்தபட்சம் 4 லட்சம் வாக்குகள் பெறுவது உறுதியாகி விட்டது. வைகோவை பொருத்தமட்டில் அவர் எப்போதும் கவுரவம் பார்ப்பவர். கீழே இறங்கி வரமாட்டார்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் நான் டிவியில் பார்த்தேன். விஜயகாந்தை கட்டி பிடித்து வரவேற்று வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். அவருக்கு ஏன் இந்த பரிதாப நிலை?