எங்கோ வாழும் ஒரு முதலாளி முக்கியமா?... இல்லை தமிழக மக்கள் முக்கியமா?- சத்யராஜ் நறுக்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு சத்யராஜ் கண்டனம் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சத்யராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100ஆவது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அலுவலகத்தை சூறையாடினர். இதனால் போலீஸார் போராட்டக்காரர்கள் மீது மார்பு மற்றும் வாய் பகுதியில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர்.
பயன்படுத்தியது ஏன்?
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரப்பர் குண்டுகளை பயன்படுத்தாமல் உயிரை கொல்லும் தோட்டாக்களை பயன்படுத்தியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|
ஆழ்ந்த இரங்கல்
இதுகுறித்து நடிகர் சத்யராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இதில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆராய வேண்டும்
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா?. இங்கே வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும் நம் தமிழக மக்களும் நமக்கு முக்கியமா? என்பதை ஆராய வேண்டும்.
உங்களில் ஒருவனாக...
இது நெஞ்சை பதைக்க வைக்கிறது. வேதனைப்படுத்துகிறது. இந்த கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உள்பட 10 பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய இரங்கலை உங்களில் ஒருவனாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.