செல்லாப்பணம் விவகாரம்: கோட்ட தபால் துறையில் குவியும் சேமிப்பு கணக்குகள்
நெல்லை: நெல்லை கோட்ட தபால் துறையில் புதிய சேமிப்பு கணக்குகள் குவிந்து வருவதால் ஊழியர்கள் பிசியாக உள்ளனர்.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பழைய நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். வங்கிகள், தபால் நிலையங்களில் பணத்தை மாற்ற பலர் போராடி வருகின்றனர்.
வங்கிகளில் காணப்படும் கூட்டம் காரணமாக பலரும் பணம் மாற்றுவதற்கு தபால் நிலையத்தையே விரும்புகின்றனர். வரிசையில் நின்று முடிந்த வரை பழைய நோட்டுகளை மாற்றி வந்த பொதுமக்கள் மாலை முதல் புதிய கணக்குகளை தொடங்க ஆர்வம் காட்டினர். அதிலும் கடந்த 8ம் தேதிக்கு பின்னர் பிரதமரின் அறிவிப்புக்கு பிறகு தபால் நிலையங்களில் புதிய கணக்குகள் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நெல்லை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையத்தில் மட்டுமே கடந்த ஒரு வாரத்தில் மொத்தம் 1800 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கணக்கில் பலர் ஆயிரக்கணக்கில் பணத்தை போடுவதும், எடுப்பதுமாக இருக்கின்றனர். ரூ.10 ஆயிரம், ரூ.12 ஆயிரம் என எடுத்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. நெல்லை தபால் கோட்டத்தில் ஒரு நாள் ரூ.3 கோடி டெபாசிட் செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய கணக்குகள் மூலம் முதலீடுகள் பெருகி வருகின்றது. இதில் 7 இடங்களில் மட்டுமே கள்ள நோட்டுகளை கண்டறியும் மிஷின் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.