கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை- சயான் கைது
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் சயான் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சயான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சயானை கோத்தகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், 900 ஏக்கரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில், மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந்துள்ளது.
பாதுகாப்புகள் நிறைந்த இந்த பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி 10 ஆம் எண் கேட் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓம் பகதூர், மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார்.
தங்கம், வைர நகைகள் கொள்ளை
மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரைத் தாக்கிவிட்டு, எஸ்டேட்டில் உள்ள பங்களாவுக்குள் புகுந்த தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணை
நீலகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையிலான போலீஸார், கொடநாடு பங்களாவுக்குச் சென்று விசாரணை நடத்தினர். பிறகு, இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
பங்களா காவலாளி
இந்த விசாரணையில், கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலை வழக்கில் முக்கிய நபராக, தனிப்படை போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டவர், கனகராஜ். இவர், போயஸ்கார்டன் முன்னாள் கார் டிரைவர். இவர் கொலை நடந்த சில தினங்களில் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி உயிரிழந்தார்.
கனகராஜ் மரணம்
கனகராஜின் நண்பரும் முக்கிய குற்றவாளியுமான சாயன் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொள்ளையில் தொடர்பு
இந்த கொலை தொடர்பாக இதுவரை கேரள மாநிலத்தைச் சேர்ந்த தீபு, சதிஷன், சந்தோஷ், உதயகுமார், டீபு, சந்தோஷ், சதீஷன் உள்ளிட்ட 9 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். பலரும் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சயான் கைது
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோத்தகிரி போலீசார் இன்று காலையில் கைது செய்துள்ளனர். சயானிடம் போலீசார் விசாரணை நடத்தினால் கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் பற்றிய மர்மம் விலகும்.