கொடநாடு கொலைவழக்கு : கைதான சயானுக்கு மீண்டும் சிகிச்சை - காரணம் என்ன?
கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், நேற்று மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: கொடநாடு காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ளது. கொடநாடு எஸ்டேட்டில், கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு காவலாளி ஓம் பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், ஏப்ரல் 30ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காடு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதில் மனைவி, குழந்தைகள் மரணமடைந்தனர்.
மேல் சிகிச்சைக்காக கடந்த மே மாதம் 13ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பூரண குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உடனடியாக கோத்தகிரி போலீஸார் சயானை கைது செய்தனர். கொடநாடு கொண்டு சென்றனர். எஸ்டேட்டில் கொலை சம்பவம் குறித்து சயான் செயல் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
இதன்பின், கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சயானை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், சயானுக்கு கையில் கடுமையான வலி ஏற்பட்டதால், அவர் நேற்று நள்ளிரவில் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பூரண குணமடைந்து விட்டதாக சயான் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.